தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நிர்வாகச்சீர்கேடு - அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

By

Published : Jul 2, 2022, 7:06 PM IST

'தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடுகள் இருந்தன; அவற்றை களைந்து நல்ல நிர்வாகம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்' என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு அமைச்சர் கேஆர் பெரியகருப்பன்
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு அமைச்சர் கேஆர் பெரியகருப்பன்

கன்னியாகுமரி: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி கோவளத்தில் அமைக்கப்பட உள்ள முன்மாதிரி வட்டார வளர்ச்சி மையம் தொடர்பான ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின்போது தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வளர்ச்சி மையம் அமைப்பது குறித்த விளக்கங்களைக் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட கண்டன்விளை அரசுப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கினை திறந்து வைத்தார். பின்னர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், 'தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதியை கொண்டு சேர்த்த பெருமை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை சாரும். அதே போல இணைப்புப்பாலங்கள் மூலம் குக்கிராமங்கள் வரை சாலைகளை அமைத்த அரசு திமுக அரசு. தரை மட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத கிராமங்கள் மலைப்பகுதிகளாக இருக்கலாம்.

அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி அமைக்கப்படும் என சொல்லப்பட்டது. சொல்வதை செய்யும் அரசு திமுக அரசு. சூழ்நிலைக்கு ஏற்றவாறு மத்திய அரசிடம் வளர்ச்சி நிதிகளை கேட்டு பெற்று வருகிறோம். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகள் இருந்தன. அவற்றை களைந்து நல்ல நிர்வாகம் உருவாக்க அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்' எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:நெல்லை கோயில் யானைக்கு ரூ.12ஆயிரம் மதிப்பில் செருப்புகள் பரிசளித்த பக்தர்கள் - தமிழ்நாட்டிலேயே முதல்முறை!

ABOUT THE AUTHOR

...view details