தமிழ்நாடு

tamil nadu

இளைஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது - தனிப்படை அதிரடி

By

Published : Jun 16, 2021, 4:51 PM IST

நாகர்கோவிலை அடுத்த பறக்கை பகுதியில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது - தனிப்படை அதிரடி
வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது - தனிப்படை அதிரடி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (24). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா (21) என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரேஷ்மா மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று (ஜுன் 15) பறக்கை குளம் அருகே ஐயப்பனும் அவரது நண்பர் சந்தோஷும் பைக்கில் சென்று கொண்டிருந்த போது அங்கு ஏற்கனவே சிலர் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதைத் தட்டிக்கேட்ட ஐயப்பனுக்கு சரமாரியாக கத்தி குத்து விழுந்தது. தடுக்க சென்ற சந்தோஷ்க்கும் கத்தி குத்து விழுந்தது.
படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஐயப்பனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சந்தோஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டார். அதன் பேரில் சுசீந்திரம் பகுதி காவல் ஆய்வாளர் ஆறுமுகம், தனிப்படை காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இவர்கள் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர்.
இதனையடுத்து பறக்கை கக்கன் புதூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்ற சாலி, சுரேஷ், கேசவன்புதூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த பிரபு, கோட்டார் வடலிவிளையைச் சேர்ந்த ஐயப்பன் ஆகிய நான்கு பேரையும் தனிப்படை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details