தமிழ்நாடு

tamil nadu

மனைவியுடன் மர வியாபாரி தற்கொலை! கடன் தொல்லை காரணமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 2:38 PM IST

Updated : Sep 23, 2023, 4:08 PM IST

கன்னியாகுமரியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் மர வியாபாரி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடன் தொல்லையால் மரவியாபாரி மனைவியுடன் தற்கொலை: உறவினர்கள் சோகம்!
கடன் தொல்லையால் மரவியாபாரி மனைவியுடன் தற்கொலை: உறவினர்கள் சோகம்!

கன்னியாகுமரி:கடன் தொல்லை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து நேசமணி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் அருகே தட்டான்விளை பகுதியில் உள்ள பெருமாள் நகரை சேர்ந்தவர் பிரவீன் (வயது 30). இவர் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ரூபா (வயது 28). இவர்களுக்கு 2 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக பிரவீனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே அதை ஈடு செய்யவும், வியாபாரத்தை பெருக்கவும் கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. எனினும் அவரால் வியாபார நஷ்டத்தில் இருந்து மீண்டு வரமுடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பி கேட்க தொடங்கியதாகவும் ஆனால் பிரவீனால் வாங்கிய கடனை திரும்பி கொடுக்க முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. கடனை அடைக்க வழி தெரியாமல் பிரவீன் திணறி வந்துள்ளார்.

இந்த நிலையில் மனமுடைந்து வாழ்க்கையில் வெறுப்புற்று போன பிரவீன் கனத்த மனதுடன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. குடும்பத்தினருடன் பிரவீன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மனைவி மயக்கம் அடைந்ததை பார்த்த பிரவீன் தன் மனைவி இறந்து விட்டார் என்று நினைத்து கதறி அழுதார்.

மன கஷ்டத்தில் விபரீத முடிவு எடுத்து விட்டதை உணர்ந்த பிரவீன் உடனடியாக வீட்டின் மேல் மாடியில் வசித்து வரும் தன் சகோதரனிடம் சென்று தானும், மனைவியும் தற்கொலைக்கு முயன்றதை கூறி கதறி அழுததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவால் நிகழ்ந்த கொலை.. மாமியார் வீடு முன் தலையை வீசிய கொடூரம்!

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சகோதரர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பிரவீனையும், ரூபாவையும் மீட்டு அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு 2 பேரையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ரூபா மற்றும் பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நேசமணிநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவியின் சிகிச்சைக்கு பணம் தேவை..! பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் உள்பட மூவர் கைது!

Last Updated :Sep 23, 2023, 4:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details