தமிழ்நாடு

tamil nadu

"திமுக என்றாலே ஊழல் தான்.. ஊழலையும், திமுகவையும் பிரிக்க முடியாது" - மத்திய இணை அமைச்சர் எல். முருகன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 10:35 PM IST

Union Minister L.Murugan press Meet: திமுக என்றாலே ஊழல் தான்; ஊழலையும், திமுகவையும் பிரிக்க முடியாது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

Union Minister L.Murugan press Meet
மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த உத்தாண்டியூர் ஊராட்சியில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இணை அமைச்சர் எல்.முருகன், “தமிழக மக்களை ஏமாற்றியது திமுக அரசு தான். சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ளப் பாதிப்பு தடுக்க சரியான முன்னேற்பாடுகள் இல்லை. ரூ.4000 கோடி செலவு செய்தும், 92 சதவீத பணிகள் தான் முடிவடைந்தது என ஒருவரும், 42 சதவீதம் தான் முடிவடைந்தது என மற்றொருவரும் பேசுகின்றனர். ரூ.4000 கோடி என்ன ஆனது என்றே தெரியவில்லை.

தற்போது தமிழக முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த பொழுது சிங்கார சென்னையாக மாற்ற வேண்டும் எனக் கூறினார். தற்பொழுது சீரழிந்து செம்மையாக மாறிவிட்டது. சென்னையைப் பொறுத்தவரை மழை வரும் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.

மழை வெள்ளத்தை முறையாக வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கவில்லை. வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. கேட்டால் 60 ஆண்டுக் கால திராவிட மாடல் என்று வருகின்றனர் இது போலி திராவிட மாடல் தான்.

மழை வெள்ள நீரைக் கடலுக்குக் கூடக் கொண்டு சேர்க்க முடியாத தோல்வி அடைந்த திராவிட மாடலாக இந்த அரசு உள்ளது. சென்னை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தைத் தடுக்காததால் கையாலாகாத அரசாக திமுக அரசு உள்ளது.

பேரிடர் நிதியாகத் தமிழக அரசுக்கு ரூ.900 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நிவாரணம் கேட்டிருக்கின்றனர் தற்பொழுது ஆய்வு செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டு பத்து நாட்களுக்குப் பிறகு தான் ஆய்வுக்குழு ஆய்வு மேற்கொள்ள வரும். தற்போது மழை பெய்து கொண்டிருக்கும் பொழுதே மத்தியக் குழு ஆய்வில் ஈடுபட்டிருக்கிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஒரு கற்றுக்குட்டியாகத் தான் இருக்கிறார். பண்புள்ளவராக வளர வேண்டும். தன்னை அவர் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின், நாடு வேகமாக வளர்ந்திருக்கிறது. திமுக கூட்டணியிலிருந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் வளர்ந்திருக்கிறது.

அந்த சமயத்தில் 2ஜி ஊழல் தான் அவர்கள் செய்த சாதனையாக இருந்தது. இன்றைய சூழலில் தமிழக அமைச்சர் ஒருவர் சிறையில் இருக்கிறார். ஒரு அமைச்சருக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் 11 அமைச்சர்கள் மீது ஊழல் விசாரணை தொடங்கி இருக்கிறது. கோடிக்கணக்கில் அமைச்சர்கள் வீட்டில் கருப்புப் பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கிறது. ஊழல் என்றாலே திராவிட முன்னேற்றக் கழகம் தான். ஊழலையும், திமுகவையும் பிரிக்க முடியாது. திமுக அமைச்சர்கள் ஊழல் செய்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக மக்கள் திமுகவை வீட்டுக்கு அனுப்பக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க:போற போக்கில் பார்க்கப் பிரதமர் என்ன வழிப்போக்கரா? பிரதமர் தமிழக முதல்வரை பார்க்க ஒதுக்கிய நேரத்தை மாற்றியது பொறுப்பற்ற தன்மை - வைகோ பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details