தமிழ்நாடு

tamil nadu

" அமைச்சர் உதயநிதியின் சனாதன கருத்தை அரசியலாக்க ஒரு கூட்டம் முயற்சி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 8:39 AM IST

Minister Periyasamy byte: அமைச்சர் உதயநிதி, சனாதனம் ஒழிப்பு குறித்து கருத்து தெரிவித்தது, ஒரு பிரச்சினையே கிடையாது. அதை அரசியலாக்க வேண்டும் என்றும், அரசியல் லாபம் பெற வேண்டும் என்றும், ஒரு கூட்டம் நினைக்கிறது. அதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி

திண்டுக்கல்:சுதந்திர போராட்ட தியாகி வ.உ சிதம்பரனாரின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் - திருச்சி சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாலை அணிவித்த பிறகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், "நம்முடைய இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தமிழகத்தில் இருந்து புறப்பட்டு ஒரு தமிழனாக முதன் முதலில் கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரையும், புகழையும் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி, வ.உ.சியின் புகழ் என்றென்றும் மக்களின் மனதில் நிலைத்து இருக்கும்.

குறிப்பாக அவர் சுதேசி இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்து சுதேசிக் கப்பலையும் இயக்கி உள்ளார். விஞ்ஞானம் வளராத காலக்கட்டத்தில் கப்பலையும் இயக்கிய ஒரு தமிழன். போராட்ட களத்திலே நாட்டின் சுதந்திரத்திற்காக தன்னையே அர்பணித்துக் கொண்ட தலைசிறந்த தலைமகனார் வ.உ.சி.யின் புகழ் என்றென்றும் ஓங்கி நிற்கும்.

மக்கள் மனதில் என்றென்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதிலே நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முதலமைச்சர் ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், ஒரு கருத்தை (சனாதனம் ஒழிப்பு குறித்து) தெரிவித்து இருக்கிறார்கள்.

இப்போது அது ஒரு பெரிய பிரச்சினையே கிடையாது. அதை அரசியலாக்க வேண்டும் என்றும், அரசியல் லாபம் பெற வேண்டும் என்றும் ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள். இந்தியாவில் யாரும் அல்ல. எந்த மாநிலத்திலும் உள்ள முதலமைச்சரோ இது பற்றி பேசவில்லை. இதை அரசியல் ஆக்கி ஆதாயம் பெறலாம் என்று ஒரு கூட்டம் நினைக்கிறது.

அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். சனாதனம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி தெளிவாக கூறியுள்ளார். கருணாநிதியும் சரி, இன்றைய முதலமைச்சரும் சரி, நாங்கள் சொல்கிற திராவிட மாடல் இது தான். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். சோசலிச சமுதாயம் தான். ஒரு காலத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்பது வாயளவில் இருந்தது.

நன்மை நிறைந்த அனைத்து திட்டங்களின் பலனை, இந்த நாட்டில் உள்ள 120 கோடி மக்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணக்கூடிய ஒரே முதலமைச்சர், தமிழக முதலமைச்சர் தான் இருக்கிறார். அதை தான் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறார். அந்த திராவிட மாடல் ஆட்சியை கொஞ்சம் காது கொடுத்து கேட்கச் சொல்லுங்கள்.

பாஜக சொல்வதைப் பற்றி கேட்ட போது, நாங்கள் கருத்து மாறுபட்டிருக்கலாம். அது வேற விஷயம். ஆனால் எங்களுக்கு ஒரே கருத்து தான். அனைத்து மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். அதைத் தவிர எங்களுக்கு எந்த நோக்கமும் கிடையாது" என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க:உ.பி., சாமியாரால் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவ முடியுமா..? - அமைச்சர் கே.என்.நேரு அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details