தமிழ்நாடு

tamil nadu

கீரனூர் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இன்ஸ்பெக்டர் வீரகாந்தி பணிநீக்கம்!

By

Published : Feb 10, 2023, 12:25 PM IST

பழனி அருகே உள்ள கீரனூர் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில், காவல் ஆய்வாளர் வீரகாந்தியை நிரந்தரமாக பணியில் இருந்து விடுவித்து திண்டுக்கல்‌ சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

பழனி பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு.. காவல் ஆய்வாளர் நிரந்த பணிநீக்கம்!
பழனி பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு.. காவல் ஆய்வாளர் நிரந்த பணிநீக்கம்!

திண்டுக்கல்: பழனி அருகே உள்ள கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர், வீரகாந்தி. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர்‌ மாதம், கீரனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், வீரகாந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அப்போதைய திண்டுக்கல் மாவட்ட ஏடிஎஸ்பியாக பணிபுரிந்த லாவண்யா தலைமையிலான விசாகா கமிட்டி, இதுதொடர்பான விசாரணையை தொடங்கியது. இதில் புகார் கொடுத்த பெண், காவல் நிலையத்தில் பணிபுரிந்த சக காவலர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆய்வாளர் வீரகாந்தி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து ஆய்வாளர் வீரகாந்தி ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனிடையே பெண் காவலர் கொடுத்த ஆதாரம், காவல் ஆய்வாளர் வீரகாந்தியின் செல்போன் உரையாடல் மற்றும் குறுந்தகவல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அப்போதைய ஏடிஎஸ்பி லாவண்யா தலைமையிலான விசாகா கமிட்டி நடத்திய விசாரணையில், காவல் ஆய்வாளர் வீரகாந்தியின் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்துள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை, விசாகா கமிட்டி அரசுக்கு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில் விசாகா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் வீரகாந்தியை பணியில் இருந்து நிரந்தரமாக விடுவித்து திண்டுக்கல் சரக டிஐஜி அபிநவ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேநேரம் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில், காவல் ஆய்வாளர் வீரகாந்தியை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரவுடி கும்பல் தாக்கிய காவலர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details