தமிழ்நாடு

tamil nadu

புதுக்கோட்டையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி - பின்னணி என்ன?

By

Published : Aug 10, 2023, 12:19 PM IST

புதுக்கோட்டையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Female police officer suicide attempt
பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி

புதுக்கோட்டை: சில நாட்களுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே பிரச்சினை தொடர்பான வழக்கில் வழக்கறிஞர் கலீல் ரகுமான், தனது கட்சிக்காரரான பெண் தரப்பிற்காக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அப்போது கலீல் ரகுமானை, அந்த பெண்ணின் கணவர் ஆரோக்கியராஜ் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்கறிஞர் சார்பில், ஆரோக்கியராஜ் மீது திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கு குறித்து 6 நாட்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து கடந்த 7 ஆம் தேதி புதுக்கோட்டை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது வழக்கறிஞரை தரக்குறைவாக பேசிய ஆரோக்கியராஜ் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆரோக்கியராஜ் மீது நடவடிக்கை எடுக்காத திருக்கோகர்ணம் காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து ஆரோக்கியராஜை கைது செய்யாததால், உடனடியாக கைது செய்யவும், திருக்கோகர்ணம் காவல் உதவி ஆய்வாளர் சங்கீதாவை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தினர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது காவல் துறையினரால் வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து வழக்கறிஞர்கள், புதுக்கோட்டை - மதுரை சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக சாலை மறியல் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து எங்களது கோரிக்கையை கேட்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் தொடரும் என கூறி மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் மதிய உணவை ஹோட்டலில் இருந்து வாங்கி வந்து சாலையில் அமர்ந்து சாப்பிட்டனர். சாலையில் நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆரோக்கியராஜை 2 நாட்களில் கைது செய்யவும், பெண் சப்-இன்ஸ்பெக்டரை ஆதனக்கோட்டைக்கு பணியிட மாற்றவும் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அதன்பின் மாலை 4.50 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டதற்காக வழக்கறிஞர்கள் மீது நகர காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். வழக்கறிஞர்கள் போராட்டத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

stop suicide

மேலும், அந்த ஆர்ப்பாட்டத்தின் போது திருக்கோகர்ணம் காவல் உதவி ஆய்வாளர் சங்கீதாவை வழக்கறிஞர்கள் மன உளைச்சல் ஏற்படும்படி பேசியதாக தெரிகிறது. இதன் தொடர் நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, திருக்கோகர்ணம் காவல் உதவி ஆய்வாளர் சங்கீதாவை ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா, நேற்று (ஆகஸ்ட் 9ஆம் தேதி) இரவு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதையடுத்து அவரை மீட்ட அவரது குடும்பத்தினர், புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது பெண் காவலர் சங்கீதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: யூடியூப் சேனல் நடத்துவதில் போட்டி: வாலிபரை கத்தி முனையில் கடத்திய கும்பல் - தருமபுரியில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details