தமிழ்நாடு

tamil nadu

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை: வீடியோ வைரல்!

By

Published : Jul 16, 2020, 8:45 PM IST

கடலூர்: விருத்தாசலத்தில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கு முன்னதாக பேசிய உருக்கமான வீடியோ வைரலாகிவருகிறது.

Towery Problem Women Suicide in Cuddalore
Towery Problem Women Suicide in Cuddalore

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (28). இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

தற்போது, ஊரடங்கால் வேலை இல்லாமல் வீட்டில் உள்ளார். இவருக்கும் கள்ளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா (21) என்ற பெண்ணிற்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்தத் தம்பதியிக்கு ஒன்றரை வயதில் விஷோத் என்ற மகன் உள்ளார். திருமணத்தின்போது 50 சவரன் தங்கநகை, இரண்டு லட்சம் ரொக்கப் பணம் வீட்டிற்கு தேவையான சீர்வரிசை என அனைத்தையும் பெண் வீட்டார் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், விஜயகுமார் ஷோபனாவை நகை பணம் கேட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும், மேலும் விஜயகுமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் விஜயகுமாருக்கும் ஷோபனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மனமுடைந்த ஷோபனா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் விருதாச்சலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஷோபனாவின் உடலை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தற்கொலைக்கு முன்பு அவர் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது தெரியவந்தது.

அந்தக் காணொலியில், "கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் என்னை வரதட்சணை கேட்டு அடிக்கடி துன்புறுத்துகிறார்கள். வீட்டின் கதவை பூட்டிவிட்டு உள்ளே வைத்து அடிக்கிறார்கள்.

வேறு ஒரு பெண்ணை வீட்டிற்கு கொண்டு வரும் நோக்கத்தில் என்னை கொடுமைப்படுத்துகிறார்கள். அம்மா உங்களை நம்பித்தான் என் பிள்ளையை விட்டுச் செல்கிறேன்.

என்னை காப்பாற்றியது போல் அவனையும் காப்பாற்றி பெரிய ஆளாக ஆக்குங்கள். இனிமேல் என்னால் உயிரோடு இருக்க முடியாது, என் அப்பாவின் உடலுக்கு அருகில் என் உடலை அடக்கம் செய்யுங்கள்.

அப்பா ஆசைப்பட்டது போல் என் உடலையும் உடல் உறுப்புகளையும் தானம் கொடுத்து விடுங்கள்" என அழுதுகொண்டே பேசியிருந்தார்.

இச்சம்பவம் குறித்து விருதாச்சலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் சோபனாவின் கணவர் விஜயகுமார் (28), அவரது மாமனார் அன்பழகன் (53), அவரது மாமியார் செல்வராணி (46) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

இதையும் படிங்க:சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்களுக்கு ஜூலை 30 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details