தமிழ்நாடு

tamil nadu

‘தமிழ்நாடு அரசு என்எல்சி-க்கு உதவும் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்’ - ஜவாஹிருல்லா வேண்டுகோள்!

By

Published : Jul 30, 2023, 10:33 PM IST

என்எல்சி நிர்வாகத்தை இன்னும் சில ஆண்டுகளில் தனியாருக்கு தாரை வார்ப்பது தான் மத்திய பாஜகவின் திட்டம். தமிழ்நாடு அரசு என்எல்சி-க்கு உதவக்கூடிய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த ஜவாஹிருல்லா
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த ஜவாஹிருல்லா

செய்தியாளர்களைச் சந்தித்த ஜவாஹிருல்லா

கடலூர்:மனித நேய மக்கள் கட்சி சார்பில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு மக்கள் நலப்பணிகளுக்கான பயிற்சிக்கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கி பேசினார். அதைத்தொடர்ந்து மாநில தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலம் உள்ளாட்சி அமைப்புகளின் பொற்காலமாக இருந்தது. அவருடைய நூற்றாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில் மேலும் அதிகமான அதிகாரங்களையும், நிதியையும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும்

தூத்துக்குடியில் 15-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையின் அதிபர் அனில் அகர்வால் வருகிற 6 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவர் வருவதை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது. அனில் அகர்வால் வருவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

நெய்வேலி இந்தியா நிறுவனம் தொடர்ச்சியாக விவசாய நிலங்களை கல்வாயாக மாற்றும் பணியை செய்து வருகிறது. இந்த கால்வாய் வெட்டிய விளைநிலங்களுக்கு ஏற்கனவே இழப்பீடு கொடுத்து விட்டோம் என்று என்எல்சியும், திமுகவும் கூறுகிறது. ஆனால் நிலத்தை கையகப்படுத்தி விட்டால் அதை 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். கையகப்படுத்தாவிட்டால், அதன்பிறகு அந்த நிலத்தின் உரிமையை, அனுபவத்தை அரசோ, அரசு நிறுவனமோ எடுக்க முடியாது அதன்படி கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு இழப்பீடு கொடுத்தாலும், நில எடுப்பு சட்டப்படி தற்போது என்எல்சி நிர்வாகம் சட்ட விரோத நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது மிக மோசமான நடவடிக்கை. பாதிக்கப் பட்ட விவசாயிகளின் மனகுமுறல்களின் வெளிப்பாடாக தான் பா.ம.க. நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. ஆகவே தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு , கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் மேல்வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் வெட்டும் பணியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கூடாது. மின்சாரம் தயாரிக்க சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத ஏராளமான வழிமுறைகள் உள்ளது.

2021 ஆம் ஆண்டு நடந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பூமி வெப்பமயமாதல் குறித்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, இனி நாங்கள் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க மாட்டோம் என்று கூறினார். அப்படி இருக்கும் போது, என்எல்சி விரிவாக்கத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவது தேவையில்லாத வேலை. என்எல்சி நிர்வாகத்தை இன்னும் சில ஆண்டுகளில் தனியாருக்கு தாரை வார்ப்பது தான் மத்திய பாஜக-வின் திட்டம். ஆகவே தமிழ்நாடு அரசு என்எல்சி-க்கு உதவக்கூடிய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். கடலூர் மாவட்டம் தொடர்ந்து வேளாண்மைக்கு வலிமை சேர்க்கும் மாவட்டமாக திகழ வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:லஞ்சம் வாங்கிய புகாரில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details