தமிழ்நாடு

tamil nadu

கடலூரில் பயங்கரம்! பச்சிளம் குழந்தைகள் உயிரோடு தீ வைத்து எரிப்பு... நடந்தது என்ன?

By

Published : Feb 8, 2023, 1:03 PM IST

Updated : Feb 8, 2023, 6:59 PM IST

கடலூர் அருகே உள்ள செல்லாங்குப்பத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தை மற்றும் குடும்பத்தாரை கொலை செய்யும் நோக்கில் கணவர் தீ வைத்த சம்பவத்தில் 4 பேர் பலியாகினர்.

கடலூரில் 2 குழந்தை உள்பட 4 பேர் உடல் கருகி உயிரிழப்பு
கடலூரில் 2 குழந்தை உள்பட 4 பேர் உடல் கருகி உயிரிழப்பு

கடலூர்:கடலூர் செல்லாங்குப்பம் வெள்ளிப்பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டதாக முதலில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போது, பிறந்து சில மாதங்களே ஆன இரண்டு பச்சிளம் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டன.

அதிர்ந்துபோன போலீசார் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் இருந்த மேலும் ஒரு பெண்ணை மீட்டதோடு, மேலும் 3 பேரை தீக்காயத்துடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் தான் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானதாக கடலூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் பெயர் தமிழரசி. இவரது சகோதரி குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை தான் இந்த தீ வைப்பு சம்பவத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. தமிழரசியின் உடன்பிறந்த அக்கா தனலட்சுமி. இவர் தனது கணவர் சத்குருவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கணவர் வீட்டை விட்டு வெளியேறி, தனது 4 மாத கைக்குழந்தையுடன் தங்கையான தமிழரசியின் வீட்டிற்குச் சென்றிருந்தார். தமிழரசிக்கும் 8 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது.

கோபித்து சென்ற மனைவியை பார்ப்பதற்காக சத்குரு இன்று (08.02.2023) காலையில் சென்றுள்ளார். ஆனால், முன்பாகவே மனைவியை கொலை செய்யும் நோக்கோடு கேன் ஒன்றில் பெட்ரோல் வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் 4 மாத கைக்குழந்தை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார். இதனைப்பார்த்த தமிழரசி தன்னுடைய அக்காவை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.

அப்போது தமிழரசி மற்றும் அவருடைய 8 மாத கைக்குழந்தை மீதும் சத்குரு பெட்ரோலை ஊற்றியுள்ளார். தீக்குச்சியை அவர் பற்ற வைத்ததும் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைவரின் மீதும் தீப்பற்றியது. இதனையடுத்து உடன் வந்திருந்த சத்குருவின் அம்மா செல்வி மீதும் தீப்பற்றியுள்ளது.

இரண்டு பச்சிளம் குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே தீக்காயமடைந்து உயிரிழந்தன. அக்காவை காப்பாற்ற முயன்ற தமிழரசியும் உயிரிழந்தார். தனலட்சுமி, சத்குரு, செல்வி ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். சுமார் 90 சதவீத தீக்காயமடைந்த மூவருக்கும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே மாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சத்குருவும் உயிரிழந்தார்.
இவர்களிடம் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில் மேற்கூறிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்திய சட்டப்பிரிவு 304 (b) கொலையில்லா மரணம் என்னும் பிரிவிலும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 174 தற்கொலை முயற்சி என்னும் பிரிவிலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீக்காயத்தின் அளவு அபாயகரமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கடலூரில் 2 குழந்தை உள்பட 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

Last Updated :Feb 8, 2023, 6:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details