தமிழ்நாடு

tamil nadu

'பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பினை சேருங்கள்' - பூச்சிமருந்துடன் விவசாயிகள் போராட்டம்!

By

Published : Dec 23, 2022, 5:18 PM IST

பொங்கல் பரிசுத்தொகுப்பில் பன்னீர் கரும்பை வழங்க வலியுறுத்தி, கடலூர் சாலையில் விவசாயிகள் பூச்சி மருந்து பாட்டிலுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூச்சி மருந்துடன் ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம்
பூச்சி மருந்துடன் ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம்

'பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பினை சேருங்கள்' - பூச்சிமருந்துடன் விவசாயிகள் போராட்டம்!

கடலூர்: ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நேரத்தில், தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பில் பன்னீர் கரும்பு வழங்குவது வழக்கம். இதனால், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் குள்ளஞ்சாவடி, சத்திரம் உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பினை விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.

அறுவடைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திடீரென நேற்று, ’பொங்கல் தொகுப்பில் பன்னீர் கரும்பு வழங்கப்படாது’, என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து ஏராளமான விவசாயி சங்கத்தினர் மற்றும் குள்ளஞ்சாவடியினைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர் கடலூர்-வடலூர் இடையே உள்ள குள்ளஞ்சாவடி பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தங்கள் கையில் பன்னீர் கரும்பை ஏந்தியும், சிலர் பூச்சி மருந்து விஷப்பாட்டில்களை கையில் வைத்தும், ‘தாங்கள் தற்கொலை செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்படும்’ எனக் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரமாகத் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏராளமான பெண்கள் சாலையில் கரும்புகளை போட்டு ஒப்பாரி வைத்து, கும்மியடித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், விவசாயிகள் போராட்டத்தினை விலக்கிக் கொள்ளாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000

ABOUT THE AUTHOR

...view details