தமிழ்நாடு

tamil nadu

முதலமைச்சர் அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பவர் என்றால் ‘இதனை’ செய்ய வேண்டும் - வானதி சீனிவாசன் கூறியது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 12:40 PM IST

Vanathi Srinivasan: இந்துக்களின் வாக்குகள் கிடைக்காமல் போய் விடுமோ என்ற பதற்றமும், அச்சமும் முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சில் தெரிந்ததாக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர்:இது தொடர்பாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நேற்று (21-10-2023) நடந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிளவுபடுத்தி நாட்டை நாசம் செய்யும் ஒரு கூட்டத்திற்கு எதிராக நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். பாஜகவின் பாசிசத்தன்மை இந்தியாவுக்கே எதிரானது. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதிரானது" என்று நீட்டி முழக்கியிருக்கிறார்.

சாதி, மதத்தின் பெயரால் நாட்டை பிளப்பது யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்திற்கு எதிராக மட்டும் செயல்படும் கட்சி திமுக என்பது ஊரறிந்த ரகசியம். கடந்த ஒன்பதரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாட்டில் சாதி, மதத்தின் அடிப்படையில் யாராவது பாதிக்கப்பட்டார்களா என்பதை நிரூபிக்க முடியுமா?

வரலாற்றிலேயே எப்போதும் இல்லாத அளவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில்தான், மிக அதிக அளவில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். பிரதமர் மோடியே மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் பட்டியலின சமூகத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. உள்துறை, நிதி, தொழில், வருவாய், உயர் கல்வி, பள்ளிக்கல்வி, நெடுஞ்சாலை, பொதுப்பணி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் பட்டியலினத்தவர்களிடம் இல்லை. 'தந்தை - மகன் - பேரன்' என நீளும் திமுகவின் வாரிசு அரசியலால், உண்மையிலேயே உழைக்கும், தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

பாஜக கட்சியில், ஆட்சியில் இப்படி யாருக்காவது வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறதா? அடுத்த பாஜக தலைவர் யார் என்பதை யாராலும் கூற முடியாது. தகுதியும், திறமையும் வாய்ந்த யார் வேண்டுமானாலும் வர முடியும். ஆனால், அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைவர் யார் என்பதை இப்போதே கூறிவிட முடியும். இதைவிட பாசிசம் இருக்க முடியுமா?

பாஜகவைப் பொறுத்தவரை அரசியல் எதிரிகள் மேல் மட்டுமல்லாது, ஊடகவியலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடப்பற்று மிக்கவர்கள் என்று எல்லோர் மீதும், அதிகார அத்துமீறல்கள், மிரட்டல்கள், அடக்குமுறை ஏவப்படுகிறது. அப்படிப்பட்ட சோஷியல் வைரஸைத்தான் நாம் எதிர்க்கிறோம் என்றும் முதலைமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

திமுகவிடம் அதிகாரம் வந்த பிறகு, சமூக ஊடகங்களில் திமுக அரசை விமர்சிப்போர், தவறுகளை சுட்டிக் காட்டுவோரை நள்ளிரவில் சுவர் ஏறி குதித்தெல்லாம் கைது செய்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து பதிவிட்ட ஒருவரை கைது செய்ய, குஜராத் வரை சென்றது, திமுக அரசின் காவல்துறை.

திமுக அரசை விமர்சித்து ஜனநாயக முறையில் விமர்சிப்பவர்களை இன்றளவும் கைது செய்து வருகிறது. அப்படி கைது செய்யப்படுபவர்களை இரவு முழுக்க வாகனத்தில் பல நூறு கிலோ மீட்டர் அலைக்கழிக்கும் கொடூரங்களையும் திமுக அரசு அரங்கேற்றி வருகிறது. இப்படி ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமையை படுகொலை செய்துவிட்டு, பாஜகவை பாசிச கட்சி என்று கொஞ்சமும் கூசாமல் சொல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

‘அவர்களுக்கு இப்போது ஒரே வேலைதான். துர்கா ஸ்டாலின் எந்தக் கோயிலுக்குப் போகிறார் என்று பார்க்கிறார்கள். அந்த போட்டோவை எடுத்துப் போட்டு பார்த்தீர்களா, கோயிலுக்குச் செல்கிறார் என பரப்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள எல்லா கோயில்களுக்கும்தான் துர்கா செல்கிறார். அது அவரது விருப்பம். அதை நான் தடுக்கவில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரிகளே தவிர, ஆன்மிகத்திற்கு எதிரிகள் அல்ல. கோயிலும், பக்தியும் அவரவர் உரிமை. விருப்பம். கோயிலையும், பக்தியையும் தங்களது அரசியலுக்கு சாதமாக மாற்ற பாஜக நினைக்கிறது’ என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், கோயில்களுக்குச் செல்வதை யாரும் எதிர்க்கவில்லை. யார் கோயிலுக்குச் சென்றாலும், எங்களுக்கு மகிழ்ச்சிதான். துர்கா ஸ்டாலின் கோயில்களுக்குச் செல்வதை பாஜகவினர் யாரும் படம் எடுக்கவில்லை. அவருடன் செல்லும் திமுகவினர்தான் படம் எடுத்து பரப்புகின்றனர்.

காரணம், திமுகவினரின் இந்து மத விரோதச் செயல்களால் இந்துக்களின் ஓட்டு பறிபோய் விடும் என்ற அச்சம் காரணமாக, துர்கா ஸ்டாலின் கோயில்களுக்குச் செல்வதை படம் எடுத்து திமுகவினரே பரப்புகின்றனர் என்று நினைக்கிறேன். ஏனெனில் 10 ஆண்டு காலம் அதிகாரத்தை இழந்ததும், திமுகவில் இருப்பவர்களில் 90 சதவீதத்தினர் இந்துக்கள் எனக் கூறியவர்தான் ஸ்டாலின்.

மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு தவறாமல் பக்கம் பக்கமாக வாழ்த்து சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் ஒரு வார்த்தையில் கூட வாழ்த்து சொல்வதில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக கோவை குண்டுவெடிப்பு கைதிகளைக் கூட விடுதலை செய்ய துணிந்துள்ள, இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக் கூட மனமில்லாத அளவுக்கு வெறுப்பு கொண்ட ஒருவர், பாஜகவைப் பார்த்து மதவாத கட்சி, பாசிச கட்சி என்பது வேடிக்கையாக உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலினின் நேற்றைய பேச்சில் எங்கே இந்துக்கள் விழிப்புணர்வு பெற்று விடுவார்களோ, அவர்களின் வாக்குகள் கிடைக்காமல் போய் விடுமோ என்ற பதற்றமும், அச்சமும் தெரிகிறது. இனியும் இந்துக்களை ஏமாற்ற முடியாது. திமுகவின் போலி நாடகங்களை, வார்த்தை ஜாலங்களை தமிழ்நாட்டு மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்.

முதலமைச்சர் அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பவர் என்றால், ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல என்று அவர் பேசியது உண்மை என்றால், வரும் ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளிக்கு வாழ்த்து கூற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பெரியகுளம் அம்மா உணவகம் பொருட்கள் வெளிசந்தையில் விற்பனை.. வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details