தமிழ்நாடு

tamil nadu

`மனிதநேயத்துடன் செய்யும் சேவை, கடவுகளுக்கே செய்யும் சேவை' - மகத்தான சேவையாற்றிய சுப்பிரமணியம் காலமானார்

By

Published : Dec 11, 2020, 2:34 PM IST

கோவை: தனது மகத்தான சேவை மூலம் பல்லாயிரம் ஏழைகளுக்கு உதவி, மக்கள் மனதில் இடம் பிடித்த சாந்தி சோஷியல் சர்வீஸ் சுப்பிரமணியம் காலமானார்.

Shanthi social service P Subramaniam
Shanthi social service P Subramaniam

கோவை சாந்தி கியர்ஸ் முன்னாள் இயக்குநரும் சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம்(78) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிவந்த இவர், 1972ஆம் ஆண்டு ஒரு லேத் இயந்திரத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு கியர் வீல்களை தயாரிக்கும் தொழிலை தொடங்கினார்.

ஆரம்ப காலகட்டத்தில் ஜவுளி இயந்திரங்களுக்கு உதிரிப் பாகங்கள் தயாரித்தவர், பின்னர் தொழிலை விரிவாக்கம் செய்து, வெளி நாடுகளுக்கு தனது பொருள்களை ஏற்றுமதியில் ஈடுபட்டார். இவ்வளவு ஏன் இஸ்ரோ நிறுவனதிற்கும்கூட இவரது தயாரிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

`மனிதநேயத்துடன் செய்யும் சேவை, கடவுகளுக்கே செய்யும் சேவை’ (Service to Humanity is Service to God)என்பதே இவரது தாரக மந்திரம். பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காகவே கடந்த 1996ஆம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பை சுப்பிரமணியம் தொங்கினார். கடந்த 2012ஆண்டு, மற்றொரு குழுமத்திற்கு சாந்தி கியர்ஸ் விற்கபட்டது.

சிங்காநல்லூர் பகுதியில் இயங்கிவரும் சாந்தி சோசியல் சர்வீஸ் வளாகத்தில் தினசரி 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுவருகிறது. மற்றவர்களுக்கு 12 ரூபாயக்கு டீபன், 30 ரூபாயில் முழு மதிய உணவு என தரமான உணவு வழங்கப்படுகிறது.

சாந்தி சோசியல் சர்வீஸின் கீழ் இயங்கும் மருத்துவமனையில் மருத்துவர் கட்டணமாக வெறும் 30 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதுதவிர மருந்தகளில் அனைத்து மருந்துகளும் 30 விழுக்காடு தள்ளுபடியிலேயே விற்பனை செய்யப்படுதிறது. மேலும், ஒருவருக்கு தேவைப்படும் அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளையும் மிக குறைந்த செலவிலேயே செய்து கொள்ளலாம். இதன் காரணமாக சாந்தி சோசியல் சர்வீஸ் வளாகத்தில் எப்போதும் மக்கள் கூட்டமாகவே காணப்படும்.

அதேபோல சாந்தி சோசியல் சர்வீஸில் இயங்கும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் ஸ்டாக் வரும்போது என்ன விலையோ அதே விலை அந்த ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படும். மற்ற டீலர்களைப்போல வந்த வரை லாபம் என்று தினசரி விலைகள் உயர்த்தப்படாது. இதன் எதிர்புறம் சாந்தி சோசியல் சர்வீஸ் கீழ் இலவச மின்மயானமும் செயல்பட்டு வருகிறது.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிச்சயமாக சாந்தி சோசியல் சர்வீஸின் சேவைகள் எதேனும் ஒன்றையாவது பயன்படுத்தியிருப்பர். இப்படி மக்களுக்கு பல ஆண்டுகள் மகத்தான சேவைகளை செய்துவந்தாலும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற காரணத்திற்காக ஊடகங்களில் முகத்தை காட்டக்கூடாது என்ற கொள்கையை அவர் இறுதிவரை உறுதியாக கடைப்பிடித்துவந்தார்.

இவ்வாறு எண்ணில் அடங்காத பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டுவந்த 78 வயதான சுப்பிரமணியம், கடந்த ஒரு மாதத்திற்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தச் சூழ்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை சுப்பிரமணியம் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: சிவகங்கையில் நடைபெற்ற ஊராட்சித் தேர்தலில் அதிமுக குலுக்கல் முறையில் தேர்வு!

ABOUT THE AUTHOR

...view details