தமிழ்நாடு

tamil nadu

ஆர்கானிக் விவசாயம், அருமையான உணவு - அசத்தும் உணவக உரிமையாளர்!

By

Published : Nov 30, 2020, 9:26 PM IST

Updated : Dec 3, 2020, 6:50 AM IST

கோவை: உணவகத்துக்கு என தோட்டம் அமைத்து இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் உணவக உரிமையாளர் பற்றி விவரிக்கிறது இத்தொகுப்பு...

உணவக உரிமையாளர்
உணவக உரிமையாளர்

ரசாயன உணவுகளின் அபாயத்தை இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சாதாரண மக்களிடம் ஆர்கானிக் எனப்படும் இயற்கை முறை விவசாய பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் சென்று சேரவில்லை என்றே சொல்லாம். யூரியா, அமோனியா, பாஸ்பேட், பொட்டாஸ் போன்ற நச்சுகள் நாம் நாள்தோறும் உண்ணும் உணவில் கண்ணுக்கு தெரியாமல் உள்ளன. இதுபோன்ற ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வேளாண்மை செய்து பெறப்படும் உணவுப் பொருட்கள் நஞ்சுத்தன்மை கொண்டவை ஆகும். இதனை உண்பதால் பலவிதமான நோய்களுக்கு நாம் ஆட்பட்டுக் கொண்டிருக்கிறோம். ரசாயன உரங்கள் ஏதும் உபயோகிக்காமல், இயற்கை முறையில் மாட்டுச்சாணம், கோமியம், காய்ந்த இலை தளைகள், என இவைகளை பயன்படுத்தி வேளாண்மை செய்து பெறப்படும் உணவுப் பொருள்கள் குறைந்த அளவே கிடைக்கின்றன.

இந்த சூழலில் கோவையில் தங்களுடைய உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நோயை தரக்கூடாது என எண்ணி உணவக உரிமையாளர் ஒருவர் உணவகத்திற்கு தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் விளைவித்து, அதை கொண்டு உணவு தயாரித்து வருகிறார். கோவை காளம்பாளையத்தை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ரங்கராஜ் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சிறுவாணி சாலையில் ஸ்ரீ வெற்றி விநாயகா மெஸ் என்ற பெயரில் வீட்டு முறை சமையல் உணவகத்தை கடந்த 5 வருடங்களாக நடத்தி வருகிறார்.

அவர் தனது உணவகம் முன்பு உள்ள நிலத்தில் வெண்டைக்காய், கத்தரிக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, கீரை வகைகள், கறிவேப்பிலை, எலுமிச்சை என அனைத்தையும் இயற்கை முறையில் விவசாயம் செய்து, நாள்தோறும் பறிக்கும் காய்கறிகளை கொண்டு மதிய உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார். இதுகுறித்து ரங்கராஜ் கூறுகையில், ”நான் கிரைண்டர் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற நிலையில், அங்கு வேலை குறைவாக இருந்ததால் அந்நிறுவனத்தின் உரிமையாளர் ராமமூர்த்திக்கு சொந்தமான இடத்தின் அருகே சிற்றுண்டி கடையை தொடங்கினேன். வாடிக்கையாளர் அதிகரித்ததால் அவர்களின் வேண்டுகோளை ஏற்று சிறிய அளவில் மதிய உணவு கடை நடத்தி வந்தேன். உணவின் தரம் சுவை நன்றாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர்.

இதனையடுத்து நிலத்தின் உரிமையாளர் அனுமதியுடன் தற்போது உள்ள உணவகத்தை ஓலைகளை கொண்டு கட்டினேன். மேலும் உணவகத்தின் முன்பு 60 செண்ட் இடம் காலியாக இருந்ததால் அங்கு இயற்கை முறையில் காய்கறிகளை விவசாயம் செய்ய முடிவு செய்தேன். எனது குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் அந்த பணியை துவங்கினேன். இங்கு காய்கறிகள் நன்றாக விளைந்ததால், அதனை கொண்டு மதிய உணவு தயாரித்து வழங்குகிறேன். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு விட்டு மனதார பாராட்டி செல்கின்றனர். கிராமத்து முறையில் பாசி பருப்பு, கொள்ளு, தட்டைபயிர், கடலை, முளைக்கட்டிய பயிர் வகைகளை கொண்டு உணவு தயாரிக்கப்படுகிறது. காய்கறி செடிகளுக்கு மாட்டு சாணம் உரமாக பயன்படுத்துகிறோம்” என்றார்.

ஆர்கானிக் விவசாயம், அருமையான உணவு

இதுகுறித்து ரங்கராஜின் சகோதரி பிரியங்கா கூறுகையில், “வாடிக்கையாளர்களை கவருவதற்காகவும், அவர்களின் உடல் நலத்தின் மீதுள்ள அக்கறையாலும் எங்கள் நிலத்தில் இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். மற்ற உணவகங்களை காட்டிலும் தரம், சுவை நன்றாக இருக்க வேண்டும் என எண்ணி நாள்தோறும் அறுவடை செய்யப்படும் காய்கறிகளை கொண்டு உணவு தயாரிக்கிறோம். விதவிதமான பொறியல்கள்,குழம்பு வகைகள் என நாள்தோறும் வழங்ககுகிறோம்” என்று கூறினார்.

இதுகுறித்து ஆலாந்துறையை சார்ந்த வாடிக்கையாளர் கண்ணன் கூறுகையில், “15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆலாந்துறையிலிருந்து சாப்பிட வந்துள்ளோம். சிறுவாணி சாலையில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளதால் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து சாப்பிடுகின்றனர். ஆலாந்துறை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரத்தில் இதுபோன்ற சுவையான உணவு கிடைப்பதில்லை. இயற்கை முறையில் விளையும் காய்கறிகளை கொண்டு உணவு தயாரிப்பதால் சுவை அதிகமாக உள்ளது. சாப்பிட்டவுடன் எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதில்லை, கோவை மட்டுமின்றி அருகில் உள்ள ஊர்களில் இருந்தும் மதிய உணவிற்கு வாடிக்கையாளர்கள் இங்கு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'மலைகள் மண்ணாவது பூமிக்கே உலை' - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

Last Updated : Dec 3, 2020, 6:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details