தமிழ்நாடு

tamil nadu

'கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க முடிவு - அமைச்சர் சக்கரபாணி தகவல்

By

Published : Jan 7, 2023, 3:44 PM IST

கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் கொடுக்கும் திட்டம் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என கோவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி

கோயம்புத்தூர்:ராமநாதபுரம் 80 அடி சாலையில் உள்ள நியாய விலைக்கடையில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடி 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 19 ஆயிரம் குடும்பங்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பச்சரிசி, முழு கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படும்.

இதனை முதலமைச்சர் நாளை மறுதினம் (ஜன.09) சென்னையில் தொடங்கி வைக்கவுள்ளார். 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 4 நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும். இந்த நாட்களில் வாங்க முடியாதவர்களுக்கு 13ஆம் தேதியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 404 நியாய விலை கடைகள் மூலம் பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படும்.

பொங்கல் பரிசுப் பொருட்கள் நூறு சதவீதம் பொருட்கள் வந்துள்ளது. கரும்பு 90 சதவீதம் வந்துள்ளது. முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் புரதச் சத்தும் வழங்க வேண்டும் என சிறப்பு பொது விநியோக திட்டம் துவங்கப்பட்டு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மைதா உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

அதில் இரண்டு பொருட்களைக் கடந்த ஆட்சியில் நிறுத்தி விட்டார்கள். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பல மாவட்டங்களிலும் தேங்காய் விலை குறைவாக உள்ளதால், நியாயவிலைக்கடை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். இதனை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும். டாக்டர் ராமதாஸ், அரசு கரும்பு கொள்முதல் செய்வதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

குறைந்தது 5 அடி இருக்க வேண்டும் என சொன்னார். 6 அடி என சொல்லவில்லை. திமுக ஆட்சியில் முழு கரும்பு கொடுக்கிறோம். அதிமுக ஆட்சியில் முழு கரும்பு கொடுத்தார்களா? சிறு சிறு துண்டுகளாகத் தான் கொடுத்தார்கள். வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் கைரேகை வைத்து ரேசன் பொருட்கள் வாங்க முடியாத நிலை இருந்தது. கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் முன்னோட்டமாக சேப்பாக்கம், பெரம்பலூர் ஆகிய இரண்டு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு கைரேகை, கருவிழி பதிவு ஆகியவை மூலம் ரேசன் பொருட்கள் கொடுப்பது அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர், நியாயவிலைக்கடை கடையில் பழைய அரிசி வழங்கப்படுவதாக அமைச்சர் சக்கரபாணியிடம் புகார் தெரிவித்தார். உடனடியாக அதிகாரிகளை அழைத்த அமைச்சர் சக்கரபாணி, அக்கடையில் வழங்கப்படும் அரிசி காட்டச் செய்து, நல்ல அரிசி மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். முன்னதாக பந்தயச் சாலை பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு சிறுதானிய மாநாடு 2023 கண்காட்சி மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அமைச்சர் சக்கரபாணி மாணவிகளிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “மாணவர்கள் தங்களுடைய முழு பொழுதையும் சமூக வலைத்தளங்களைப் பார்ப்பதில் கழிக்கின்றனர் இதை தவிர்த்து உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற துறைகளில் ஆர்வம் செலுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:"போகியில் பொருட்களை எரிக்க வேண்டாம்" சென்னை மாநகராட்சி புது முயற்சி!!

ABOUT THE AUTHOR

...view details