தமிழ்நாடு

tamil nadu

உடனுக்குடன் கணக்கெடுப்பதால் அதிக யானைகள் இறப்பதாகத் தெரிகிறது - அமைச்சர் மதிவேந்தன்

By

Published : Apr 26, 2023, 9:59 PM IST

யானைகள் உயிரிழந்தால், உடனடியாக அதனை கணக்கில் எடுத்துக் கொள்வதால் அதிகப்படியான யானைகள் இறப்பதாகத் தெரிகிறது என அமைச்சர் மதிவேந்தன் கூறி உள்ளார்.

உடனுக்குடன் கணக்கெடுப்பதால் அதிக யானைகள் இறப்பதாக தெரிகிறது - அமைச்சர் மதிவேந்தன்
உடனுக்குடன் கணக்கெடுப்பதால் அதிக யானைகள் இறப்பதாக தெரிகிறது - அமைச்சர் மதிவேந்தன்

கோயம்புத்தூர்: வால்பாறை வட்டம், சிறுகுன்றா என்ற தனியார் எஸ்டேட் பகுதியில், தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் அணில் ஓராண் என்பவரை 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று தாக்கியது. இதனையடுத்து அவருக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கோவை அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட அணில் ஓராணை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், “அணில் ஓராணை சிறுத்தை தாக்கியதில் கால் முறிவு ஏற்பட்டது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, 4 ஆயிரம் ரூபாய் முன்பு தரப்பட்ட நிலையில், தற்போது மேலும் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுத்தையைப் பிடிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக வேட்டைத் தடுப்பு காவலர்களையும் வன அதிகாரிகள் தலைமையில் 12 பேர் கொண்ட தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளனர்.

வனப் பகுதிகளில் இருந்து வன விலங்குகள் ஊருக்குள் வராத வண்ணம் வனத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி வன விலங்குகள் ஊருக்குள் வந்து கால்நடைகளையோ, செல்லப் பிராணிகளையோ ஏதேனும் செய்தால், அதற்கான நிவாரணங்கள் வழங்கப்படும். மேலும், காட்டு யானைகள் ஊருக்குள் வராத வண்ணம் பாதுகாப்பதற்கு மின் வேலிகள், செயற்கை நுண்ணறிவு கருவிகள் ஆகியவற்றை யானைகளுக்குப் பாதிப்பு வராத வகையில் பயன்படுத்தி வருகிறோம்” என்றார்.

இதனையடுத்து வனப் பகுதியில் தனியார் ரிசார்ட்கள் அமைக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் மதிவேந்தன், “வனத்துறையை மீறி ஆக்கிரமிப்பு செய்திருந்தால், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோடை காலத்தை முன்னிட்டு, வன விலங்குகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறாமல் இருப்பதற்காக, வனத்திற்குள்ளேயே அதற்கான குடிநீர் ஆதாரங்கள் மற்றும் உணவு ஆதாரங்களை வைத்து வருகிறோம்.

வன விலங்குகளால் மனிதர்களுக்கோ அல்லது மனிதர்களின் இருப்பிடங்களுக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு 10 கோடி ரூபாயை முதலமைச்சர் வருடந்தோறும் ஒதுக்கி வருகிறார்’’ என கூறினார். தொடர்ந்து, சமீப காலங்களில் யானைகள் உயிரிழப்பு அதிகமாகி வருவது குறித்த கேள்விக்கு, “யானைகள் உயிரிழந்தால், உடனடியாக அதனை கணக்கில் எடுத்துக் கொள்வதால், அதிகப்படியான யானைகள் இறப்பதாகத் தெரிகிறது.

யானைகள் வயது மூப்பின் காரணமாகவோ அல்லது ஏதேனும் பள்ளத்தில் கீழே விழுந்தாலோ, அந்த அதிர்ச்சியின் காரணமாகக் கூட சில யானைகள் உயிரிழக்கக் கூடும். அதேநேரம், யானைகளை நம்மால் எவ்வளவு காப்பாற்ற முடியுமோ, அதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். யானைகளின் வலசைப் பாதைகள் எங்கெங்கு உள்ளது என கண்டறிந்து வரப்படுகிறது” என அமைச்சர் பதில் அளித்தார்.

இதையும் படிங்க:காலில் காயத்துடன் உணவு தேடும் ஒற்றை காட்டு யானை

ABOUT THE AUTHOR

...view details