தமிழ்நாடு

tamil nadu

"வித்தியாசமாக தெரியும் நடவடிக்கைகள்" - கோவை நகைக் கடை கொள்ளை குறித்து போலீஸ் கூறுவது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 4:53 PM IST

Coimbatore Jewellery shop Robbery: கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடையில் சுமார் 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Jewellery Robbery Case in Coimbatore
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 150 சவரன் நகை திருட்டு

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 150 சவரன் நகை திருட்டு

கோயம்புத்தூர்: காந்திபுரம் 100 அடி சாலையில் பிரபல தங்க நகை கடையான ஜோஸ் ஆலுக்காஸ் செயல்பட்டு வருகிறது. கடையை நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் மூடி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று (நவ.28) காலை கடையை திறந்து பார்த்தபோது நகைக்கடையில் இருந்த தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனைக்கண்ட ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 150 முதல் 200 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என போலீசாரால் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகர காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அதன்பின், மாநகர காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “காட்டூர் பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நள்ளிரவு நேரத்தில் ஒரு நபர் கடையினுள் புகுந்து கடைக்குள் ஆங்காங்கே மட்டும் நகைகளை எடுத்து உள்ளார். பின்னர் வந்த வழியாகவே சென்றுள்ளார்.

பின்னர், காலையில் கடையை திறந்து பார்த்தபோது கடை ஊழியர்கள் நகை திருடு போய் இருப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். கடையினுள் 12 நபர்கள் தங்கி உள்ள நிலையில் யாரும் திருட வந்தவர்களைப் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

போலீசார் மேற்கொண்ட ஆய்வில் சில தடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் குற்றவாளியைப் பிடித்து விடலாம். சிசிடிவியை ஆய்வு செய்யும் பொழுது ஒரு நபர் தென்படுகிறார். இந்த கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் சுமார் 150 லிருந்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசுகையில், “இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் உள்ளே சென்ற பொழுது முகத்தை மறைத்ததாக தெரிகிறது. ஆனால் முகமூடி எதுவும் போடவில்லை. தற்பொழுது ஆய்வு செய்த பட்சத்தில் ஏசி வெண்டிலேட்டர் வழியாக சென்றதாக தெரிகிறது. அண்மையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதால் அந்த பணிகளை மேற்கொண்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், கடைகளுக்கு வெளியில் உள்ள கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம். சம்பவத்தில் ஈடுபட்டவர் வெளியூர்காரர் போல் தெரியவில்லை. சம்பவத்தில் ஈடுபட்டவரின் நடவடிக்கைகள் வித்தியாசமாக தெரிகிறது. எனவே, தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என மாநகர காவல்துறை துணை ஆணையர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தென் ஆப்பிரிக்கா பிளாட்டினம் சுரங்கத்தில் விபத்து - 11 பேர் பலி!

ABOUT THE AUTHOR

...view details