தமிழ்நாடு

tamil nadu

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன் பிடிபட்டது எப்படி? 99.5 சதவீத நகைகள் மீட்பு.. துணை காவல் ஆணையர் பரபரப்பு பேட்டி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 12:51 PM IST

Updated : Dec 12, 2023, 1:11 PM IST

Jos Alukkas: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட விஜய் தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று (டிச.11) அவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

jos-alukkas-theft-how-was-caught-coimbatore-deputy-commissioner-of-police-explain
துணை காவல் ஆணையர் சந்தீஷ் பேட்டி

துணை காவல் ஆணையர் சந்தீஷ் பேட்டி

கோயம்புத்தூர்:கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியதில், தருமபுரியைச் சேர்ந்த விஜய் என்பவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்த வழக்கில் கொள்ளையடிக்க உதவிய விஜய்யின் மனைவி நர்மதா மற்றும் நகைகளை மறைத்து வைத்த நர்மதாவின் தாய் யோகராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த விஜய்யை தனிப்படை காவல் துறையினர் சென்னையில் நேற்று கைது செய்தனர்.

இது தொடர்பாக கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் “கடந்த நவம்பர் 27ஆம் தேதி இரவு நூறடி சாலையில் உள்ள ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் 5.15 கிலோ நகைகள், வைரம், பிளாட்டினம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

கொள்ளையடிக்கப்பட்ட நகை

சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. கைரேகை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தருமபுரியைச் சேர்ந்த விஜய் (26) இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த வழக்கில் விஜய்யின் மனைவி மற்றும் அவரது மாமியார் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனால் தலைமறைவாக இருந்த விஜய்யைப் பிடிக்க கஷ்டமாக இருந்தது. மேலும் அவர், சென்னை, திருப்பதி என மாறி மாறி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள கடை ஒன்றில் சிம் வாங்குவதற்காக விஜய் வந்தபோது அவரை கைது செய்தோம். மேலும், அவரிடம் இருந்த 700 கிராம் தங்கம் மற்றும் அவரது உறவினர் வீட்டில் திருடிய 42 கிராம் தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

99.5 சதவிதம் நகை மீட்பு: ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 5.15 கிலோ கொள்ளை போன நிலையில், 5.12 கிலோ மீட்கப்பட்டது. 99.5 சதவீதம் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்க வேண்டுமென்ற நோக்கம் விஜய்க்கு இருக்கவில்லை. ஒரு மொபைல் கடையில் திருட முயற்சி செய்துள்ளார். ஆனால், மொபைல் கடையில் சரக்கு இறக்கி கொண்டு இருந்ததால், அதைவிட்டு விட்டு அந்த பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.

நகை கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? அப்போது ஒரு சிறிய சந்தில் சென்றபோது, ஒரு பிளைவுட் இருந்துள்ளது. அதனை தொட்டதும் சிறிய வழி இருப்பது தெரிந்ததும், உள்ளே செல்ல முயன்றுள்ளார். கொஞ்சம் மேலே ஏறியதும், வெளிச்சம் இருந்த பக்கமாக சென்று கடைக்குள் நுழைந்துள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கு இருப்பதைப் போன்ற உடல் வலு அவருக்கு இயல்பாகவே இருந்துள்ளது. அவர் எடை குறைவாக இருந்ததால், அந்த வழியாக செல்ல முடிந்துள்ளது. கடைக்குள் நுழைந்ததும் முதலில் பணம் எடுக்கதான் முயற்சி செய்துள்ளார். பணத்தை தேடி கிடைக்காததால், ஆங்காங்கே இருந்த நகைகளை எடுத்துள்ளார்.

அக்கடையில் சில இடங்களில் மட்டுமே அலாரம் அடிக்கும் வகையில் இருந்துள்ளது. இவர் சென்ற வழியில் அலாரம் இருக்கவில்லை. இதுவரை நடத்திய விசாரணையில், கொள்ளைச் சம்பவத்தில் வெளி ஆட்கள் உதவி இல்லை என தெரிகிறது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

விஜய் காலை நேரங்களில் ஒரு ஊரில் இருப்பது, இரவு பேருந்தில் ஏறி பயணம் செய்வது என சுற்றிக் கொண்டே இருந்துள்ளார். இதுபோன்ற சம்பவங்களை நடைபெறாமல் இருக்க 50 வயதிற்கு உட்பட்டவர்களை, காவலர்களாக நியமிக்கவும். இரவு நேரங்களில் நகைகளை லாக்கரில் வைக்கவும், வைப்ரேசன் சென்சார் மற்றும் புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் நகைக்கடைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சினிமா பாணியில் நடந்த சேசிங்.. கஞ்சா கடத்தல்காரர்களை விரட்டிப் பிடித்த காவல்துறை!

Last Updated : Dec 12, 2023, 1:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details