தமிழ்நாடு

tamil nadu

Coimbatore Banner Accident: கோவை ராட்சத பேனர் சரிந்து மூவர் பலியான விவகாரத்தில் 2 பேர் கைது!

By

Published : Jun 2, 2023, 6:13 PM IST

கோவை அருகே ராட்சத விளம்பர பேனர் பொருத்தும் பணியின்போது சாரம் சரிந்ததில் மூவர் பலியான சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நில உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரரை தேடி வருகின்றனர்.

giant banner falling down near Coimbatore three people died In the case police have arrested two people
கோவை ராட்சத பேனர் சரிந்து மூவர் பலியான விவகாரத்தில் இருவர் கைது

கோவை:கருமத்தம்பட்டி அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ராமசாமி என்பவரது இடத்தில் ராட்சத பேனர்கள் வைக்கும் பணி நேற்று மாலை நடைபெற்றது. இந்த பணியை சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த சேர்ந்த 7 தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர்.

பணியின் போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாரம் சரிந்து விழ தொடங்கியது. இந்நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த அனைவரும் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள கீழே இறங்கி தப்பிக்க முயன்றனர். அப்பொழுது பேனர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் குணசேகரன்(52), செந்தில் குமார் என்கின்ற செந்தில் முருகன் (38), குமார்(51) என்ற 3 தொழிலாளர்கள் கீழே இறங்குவதற்கு முன்னரே பேனர் சாய்ந்ததில் சாரத்தின் அடியே சிக்கி சம்பவ இடத்திலேயே மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் பேனர்களை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஜ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அலட்சியமாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் நால்வர் மீது வழக்கு பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார், சப் காண்ட்ராக்டர் பழனிசாமி மற்றும் மேலாளர் அருண் ஆகியோரை கைது செய்தனர். அதே போல தலைமறைவாக உள்ள ராட்சத பேனர் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் உரிமையாளர் ராமசாமி மற்றும் காண்ட்ராக்டர் பாலாஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.

இதனிடையே கோவை மாவட்ட நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், “கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சாலைகள், மாநில நெடுஞ்சாலை சாலைகள், மாநாகராட்சி சாலைகள், உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமான சாலைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் / டிஜிட்டல் பேனர்கள் / பிளக்ஸ் போர்டுகள்/ கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றுவது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதில், கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 அனுமதியற்ற விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.

விளம்பர பலகைகளை ஊராட்சி பகுதிகளில் அமைப்பதற்கு, அரசாணை (நிலை) எண். 41, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை (PR.I) துறை நாள்: 18.05.2009-ல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விண்ணப்பித்து முறைப்படி அனுமதி பெறப்பட வேண்டும்.

மேலும், விளம்பர பலகைகளை பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைப்பதற்கு அரசாணை (நிலை) எண். 45, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை நாள்: 12.04.2023-ல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்தும், காவல்துறையினர் பரிந்துரையின்படியும் அனுமதி பெறப்பட வேண்டும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அகற்றுவதற்கு தனி குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், தெக்கலூர் நீலம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அனுமதியற்ற விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுமின்றி விளம்பர பலகை அமைக்கும் போது, இரும்பு கம்பம் சரிந்து விழுந்து கடந்த 01.06.2023 அன்று சேலம் மாவட்டத்தைச் சார்ந்த மூன்று நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக, அனுமதியின்றி விளம்பர பலகை அமைக்க முயன்ற நிலத்தின் உரிமையாளர் மீதும், சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் மீதும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தின் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: Gokulraj murder case: தீர்ப்பில் பிழை இல்லை.. 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி.. கோகுல்ராஜ் வழக்கு கடந்து வந்த பாதை!

ABOUT THE AUTHOR

...view details