தமிழ்நாடு

tamil nadu

"என்னை வெட்டி கூறு போட்டாலும் உண்மையை சொல்வேன்" - கனகராஜின் சகோதரர் தனபால் உறுதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 5:26 PM IST

Kodanad Murder Case: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணைக்காக சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகள் முன் இன்று (செப்.14) ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் ஆஜரானார்.

Kodanad Murder Case
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு

"என்னை வெட்டி கூறு போட்டாலும் உண்மையை சொல்வேன்" - கனகராஜின் சகோதரர் தனபால் உறுதி

கோயம்புத்தூர்:தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அதிகாரிகள் முன் ஆஜராக வருகை புரிந்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "சிபிசிஐடி அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கு சம்மன் அனுப்பினார்கள். அதனால் இன்று (செப்.14) விசாரணைக்கு ஆஜராகியுள்ளேன். கொடநாடு வழக்கு தொடர்பாக சுதாகர் தலைமையில், ஏற்கனவே விசாரணை நடந்தது. தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளேன். எனது தம்பி ஏற்கனவே எல்லா உண்மையையும் சொல்லியுள்ளார்.

கோடநாடு வழக்கில் யார் யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது? என்ன நடந்தது? என எனது தம்பி என்னிடம் சொல்லியுள்ளார். அதனை சிபிசிஐடி அதிகாரிகளிடம் சொல்லவுள்ளேன். கொடநாடு வழக்கில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை நபர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட நபர்கள் வருகிறார்கள். இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் தான், மாற்று கட்சியினர் யாரும் இல்லை. ஒரு சில கூலிப்படையினரும் உள்ளனர்.

கோடநாடு சம்பவத்திற்கு பிறகு சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமியின் மச்சான் வெங்கடேஷ், சேலம் இளங்கோவன் ஆகியோர் எனது தம்பியிடம் பேரம் பேசியபடி பணம் தரவில்லை. அதற்கு பதில் எனது தம்பியை தாக்கியுள்ளனர்.‌ எஸ்பிசிஐடி ஒருவரும் சேர்த்து தாக்கியுள்ளார். பின் 2 நாட்கள் கழித்து எங்களது சமுத்திரம் கிராமத்தில் மது குடிக்கும் போது, அதில் விஷம் கலந்தது தெரிந்து எனது தம்பி தப்புகிறார். திரும்ப அத்தூரில் இளங்கோவன் பணம் தருவதாக அழைத்து, அயோத்திபட்டிணம் என்ற இடத்தில் உள்ள தென்னந்தோப்பில் மது அருந்தியுள்ளனர்.

அதிமுக முக்கிய நபர்கள் அதிக போதை ஏற்றிவிட்டு விபத்தில் பலியானது போல சாலையில் வீசி சென்றுள்ளனர். இதை நான் அப்போது இருந்தே சொல்லி வருகிறேன். இதற்கு நியாயம் கிடைக்கவில்லை. சிபிசிஐடி மூலம் இன்று நியாயம் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. எனது தம்பி சூட்கேஸில் எடுத்து வந்த ஆவணங்களை நான் திறந்து பார்க்கவில்லை. 5 பேக்குகளில் 3 சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி மச்சான் வெங்கடேஷிடமும், 2 பேக் சேலத்தில் ஆத்தூர் இளங்கோவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று மாலை விசாரணைக்கு பின்னர் என்ன நடந்தது என விளக்கமாக கூறுகிறேன். எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, அன்பரசன், சஜீவன், அனுபவ் ரவி, கப்பச்சி வினோத், அத்தூர் இளங்கோவன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள். மற்றவர்கள் அவர்களுக்கு கீழ் உள்ளவர்கள். எனக்கு மனநிலை பாதிப்பு இருந்தால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.

இளங்கோவன், சவுக்கு சங்கர் போன்றோர் என்னை மனநலம் பாதிக்கப்பட்டவன் என சான்றிதழ் அளித்திருக்க வேண்டும். என் மீது பொய்யான குற்றச்சாட்டை சொல்லுகின்றனர். ஏற்கனவே சம்பவம் நடந்தபோது, என்னிடம் ஊட்டியில் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சேலத்தில் சுதாகர் தலைமையில், விசாரணை நடந்தது. ஏடிஎஸ்பி கிருஷ்ண மூர்த்தி, ஐஜி சுதாகர் ஆகியோர் என்னை கடுமையான முறையில் தாக்கினர்.

அப்போது ஒன்றரை நாட்கள் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. என்னென்ன வாங்கி எழுதினார்கள் என தெரியவில்லை. ஜஜி சுதாகரை விசாரிக்க வேண்டும். சேலம் எஸ்பி, ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா, எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்பிசிஐடி முத்துமாணிக்கம் ஆகியோரை விசாரித்தால் எல்லாம் வெளியே வரும். 2017க்கு பிறகு கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சொத்து மதிப்பு உயர்வு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கவனிக்க வேண்டும்.

விசாரணை அதிகாரி சொத்து மதிப்பையும் கவனிக்க வேண்டும். தடயங்கள் அழித்ததாக ஐஜி சுதாகர் என் மீது வழக்கு பதிவு செய்தார். நான் எந்த தடயத்தையும் அழிக்கவில்லை. எடப்பாடி, இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா சோதனை செய்ய போது போனை வாங்கி கொண்டனர். ஐஜி சுதாகரின் பலவீனத்தை பயன்படுத்தி ஆத்தூர் இளங்கோவன், எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சேர்த்து என் மீது குற்றச்சாட்டை மாற்றியுள்ளனர்.

சிபிசிஐடி விசாரணையில் அனைத்தையும் சொல்வேன். மேலும் அவர்கள் விசாரணைக்கு 200 சதவீதம் ஒத்துழைக்க தயார். தற்சமயம் எனக்கு மிரட்டல் இல்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து 2 ஆயிரம் கோடி தருவதாக ஆத்தூர் மணி என்பவர் மூலம் பேரம் பேசினார்கள். நான் உண்மை கண்டறியும் சோதனைக்கும் தயார். என்னை வெட்டி கூறு போட்டாலும் உண்மையை சொல்வேன். எதற்கும் தயாராக உள்ளேன்" என தெரிவித்தார். மேலும் சில தினங்களுக்கு முன்பு தன்னை சிபிசிஐடி அதிகாரிகள் முன் ஆஜராகவிடாமல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தடுத்ததாக தனபால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "அமித் ஷா - எடப்பாடி சந்திப்பு... நாடாளுமன்ற தேர்தலுக்கு அல்ல.. சட்டமன்றத்திற்கும் சேர்த்து தான்" - கடம்பூர் ராஜூ!

ABOUT THE AUTHOR

...view details