கோயம்புத்தூர்:கையில் ஆயுதங்களுடன், கையில் சிகரெட்டுடன் ரவுடி தொனியில் தனது நண்பர்களுடன் வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இளம்பெண்ணை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது அப்பெண் தான் திருந்து கணவருடன் வாழ்ந்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாநகரில் கடந்த மாதம் நிகழ்ந்த இருவேறு கொலை சம்பவங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கோயம்புத்தூர் மாநகர காவல் துறையினர் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், சிலர் தாமாக முன்வந்து சரணடைந்தனர்.
அதே சமயம் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி கோவை மாநகரில் ரவுடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும், சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களைக் கொண்டு வீடியோ பதிவிடும் நபர்கள் குறித்தும் கண்காணிக்க வேண்டும் என கூறினார்.
இந்நிலையில் கோவை மாநகரில் ரவுடி செயல்களில் ஈடுபடும் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களை கொண்டு மக்களை மிரட்டுகின்ற தொணியில் வீடியோ பதிவேற்றம் செய்த சுமார் 30க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக கோவையில் வசித்து வந்த இளம்பெண் தமன்னா என்ற வினோதினி கையில் ஆயுதங்களுடன், வாயில் சிகரெட்டுடன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.