தமிழ்நாடு

tamil nadu

"ஆவின் பால் விவகாரத்தில் அரசு திணறல்; அமைச்சருக்கே சிறையில் சரியான உணவு இல்லை" - தமிழக அரசை விளாசிய வானதி சீனிவாசன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 7:14 AM IST

Vanathi Srinivasan: தமிழக அமைச்சர்கள் தங்கள் மீது எப்போது ரெய்டு வரும் என எதிர்ப்பாத்துக் கொண்டிருப்பதால் அரசாங்கத்தின் பணிகளில் அவர்களது கவனம் இல்லை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

கோயம்புத்தூர்:கோவை ராமநாதபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர், பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியை பாஜக நிர்வாகிகளோடு அவர் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், "கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மக்களை நேரடியாக சந்தித்து வாகனங்கள் வாயிலாக பல்வேறு அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். மக்கள் தங்களது குறைகளை நேரடியாக கூறும் வகையில் பாஜகவின் மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மோடியின் நல்லாட்சியில் மக்களுக்கான சிறப்பான திட்டங்கள் எந்தவித இடைத்தரகர்களும் இல்லாமல் நேரடியாக கோடிக்கணக்கான பயனாளிகளை சென்றடைந்து வருகிறது. தமிழகத்தில் பாஜக மாநில தலைவரின் 'என் மண், என் மக்கள்' யாத்திரைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் செல்லும் இடமெல்லாம் ஆதரவு தந்து வருகின்றனர். இதுபோன்று பல்வேறு வகையிலும் பாரதிய ஜனதா கட்சி சிறப்பாக வளர்ந்து வருகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டி உருவாக்கப்பட்டு மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்லும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். பருவமலை காலங்களில் மழைநீர் தேங்காாமல் இருக்க உள்ளாட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும். அந்த வகையில் எனது கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட லங்கா கார்னர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கும் பிரச்சனை தொடர்ச்சியாக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது.

தமிழகத்தில் அமைச்சர்கள் தங்கள் மீது எப்போது ரெய்டு வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால், அரசாங்கத்தின் பணிகளில் அவர்களது கவனம் இல்லை. ஒவ்வொரு நாளும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளால் ஏராளமான மக்கள் பாதித்து வருகின்றனர். காய்ச்சல் முகாம்கள் குறித்து சரியான தகவல்கள் தெரிவிக்கப்படுவதில்லை. குப்பை தேங்குவது மற்றும் கொசு தொல்லை அதிகமாகி வருகிறது. எனவே, குப்பை மற்றும் மழை நீர் தேங்குவதை தடுத்து நிறுத்தினால் மட்டுமே காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும். உள்ளாட்சி நிர்வாகத்தின் பணிகளை தீவிரப்படுத்தி காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசி வருகிறார். கோவையை சேர்ந்த பல்வேறு தன்னார்வலர்கள் குறித்து அவர் பேசியுள்ளார். இன்றைய நிகழ்ச்சியிலும் மக்கள் சேவை செய்யும் கோவையை சேர்ந்த தன்னார்வலர் குறித்து பேசி உள்ளார். நல்ல காரியங்களை செய்யும் தன்னார்வலர்களை தேடி தேடி பிரதமர் பாராட்டுவது அவர்களுக்கு ஊக்கத்தையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும்" எனக் கூறினார்.

மேலும், "ஆவின் பால் பிரச்சனையை பொருத்தவரை, தமிழக அரசு நிலையான முடிவுகளை எடுக்காமல் தடுமாறி வருகிறது. ஆவின் நிர்வாகம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என அமைச்சர் பேசினாலும், விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதலை குறைத்தது குறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பேசினால் தரக்குறைவான விமர்சனங்களை அமைச்சர் முன் வைக்கிறார். மக்களின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டுவது தான் எதிர்க்கட்சிகளின் வேலை. இதற்கு சரியான பதில் அளிப்பதை விட்டுவிட்டு தனி நபர் தாக்குதல் செய்வது கண்டிக்கத்தக்கது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு, ஆசிரியர் தேர்வு ஆகியவற்றில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தூய்மை பணியாளர் ஒருவர் இறந்து விட்டால் அவரது குடும்பத்தில் உள்ளவருக்கு தான் அந்த வேலை வழங்க வேண்டும் என்பது அரசாங்க விதி. ஆனால், அதற்கு பதிலாக ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றுவது மூலமாக அரசாங்க ஊழியர் என்கிற நிலையே தூய்மை பணியாளர்களுக்கு இல்லாமல் போய் வருகிறது.

சமூக நிலையில் பின் தங்கியவர்களுக்கு அரசு வேலை என்பது ஒரு சமூக அந்தஸ்தை ஏற்படுத்துகிறது. சமூக நீதி பேசும் அரசு இதை பறிப்பது கண்டிக்கத்தக்கது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை மோசமடைந்து வருவது மனிதாபிமான அடிப்படையில் வருத்தம் அளிக்கிறது. ஒரு அமைச்சருக்கு கூட, சிறையில் சரியான உணவும், மருத்துவ வசதியும் இல்லை எனும் நிலை தான் உள்ளது. ஒரு வேலை தமிழக அரசு அவருக்கு மருத்துவத்தையோ உடல்நிலையோ கவனிக்க முடியவில்லை என்றால், எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற மத்திய அரசின் உதவிகளை நாடலாம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோயம்புத்தூர் மாவட்ட பாஜக தலைவர் திடீர் விலகல் - என்ன காரணம்?

ABOUT THE AUTHOR

...view details