தமிழ்நாடு

tamil nadu

இளம் குற்றவாளிகளை தடுக்க 'ஆப்ரேசன் ரீபுட்' - காவல்துறை திட்டம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 8:01 PM IST

Coimbatore police: குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை கைவிட்ட இடைநிற்றல் பள்ளி மாணவர்களை ‘ஆபரேஷன் ரீபூட்’ திட்டத்தின் மூலம் மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையை கோவை காவல்துறை முன்னெடுத்துள்ளது.

இளம் குற்றவாளிகளை தடுக்க 'ஆப்ரேசன் ரீபுட்'
இளம் குற்றவாளிகளை தடுக்க 'ஆப்ரேசன் ரீபுட்'

கோயம்புத்தூர்:கோவை மாநகரில் ‘ஆபரேஷன் ரீபூட்’ என்ற திட்டத்தின் மூலம் 173 இடைநிற்றல் பள்ளி மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது. மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி மாநகர காவலர் ஆணையர் அலுவலகத்தில் இன்று (29.08.2023) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். குடும்ப சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவ, மாணவிகள் மேலும் தகாத நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு பள்ளிக்கல்வியை நிறுத்திய நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களை காவல்துறை கண்டறிந்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, இடைநிற்றல் மாணவர்களைத் தொடர்ந்து கண்காணித்து அவர்களையும், அவர்களுடைய பெற்றோரையும் சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து பள்ளியில் சேர்ப்பதற்கான பணியை ஒவ்வொரு மாநகர காவல் நிலையமும் மேற்கொண்டுள்ளது.

ஒவ்வொரு மாணவ மாணவிகளையும் தொடர்பு கொண்ட போலீசார் அவர்களது பெற்றோர்களிடம் பாராட்டு விழா நடத்துவதாகத் தெரிவித்துள்ளது. பெற்றோர்கள் எதற்குப் பாராட்டு விழா எனக் குழம்பி நின்றபோது, மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான விழா எனக் கூறியுள்ளனர்.

இந்நிகழ்வில் பேசிய காவலர்கள், அதிகபட்சமாக உக்கடம் காவல் நிலையத்தில் 15 மாணவ மாணவிகளைச் சேர்த்துள்ளதாகத் தெரிவித்தனர். காவல் நிலையத்தில் உள்ள ‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் பணி செய்பவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்தான வழக்குகளைப் பதியக்கூடிய காவலர்கள் மேலும் குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு போன்ற திட்டத்தில் பணிபுரியும் காவலர்களை உள்ளடக்கிய மூன்று பிரிவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முயற்சித்தனர்.

அவர்களது தொடர் முயற்சி காரணமாக 178 மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வருவதற்கான சாத்தியங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 153 பேர் தற்போது கோவை மாவட்டத்தில் இருப்பதாகவும், 20 பேர் வெளி மாநிலத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மாணவரையும் சந்தித்து அவர்களை மீண்டும் பள்ளிக்குப் படிக்க வர வேண்டும் என்று சொல்லியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒவ்வொரு மாணவருக்குப் பின்னும் ஒவ்வொரு பிரச்சனையும், சூழலும் இருந்ததாகவும் அதில் முடிந்ததைச் செய்துகொடுத்து தற்போது மீண்டும் அவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்கான பணியைச் செய்ததாகக் காவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மாணவர்களை மற்றொரு தரப்பினரின் உறவினர்கள் தாக்கிய விவகாரம்: பெற்றோரிடம் காவல் துறை பேச்சு வார்த்தை!

இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் பேசுகையில், பெரும்பாலான மாணவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், அப்பா அம்மா இல்லாத நிலையில் படிப்பைக் கைவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஒரு சில மாணவர்கள் தன்னைவிட வயதில் பெரிய நபருடன் பழகி பள்ளிப் படிப்பை விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் காவலர்கள் முதலில் வீட்டுக்கு வந்தது பயமாக இருந்ததாகவும், பின்பு அவர்கள் பொருளாதார மற்றும் கல்வி குறித்தான செலவை ஏற்றுக்கொண்டு படிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தருவதாக உத்தரவாதம் அளித்ததையடுத்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஒப்புக்கொண்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

அதில் ஒரு சில மாணவர்கள் வேலைக்கும் செல்லாமல் மீன் பிடிப்பது, ஊர் சுற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்ததாகவும், காவலர்கள் தனக்குச் சரியான அறிவுரை கொடுத்ததாகவும் தெரிவித்தனர். மேலும் வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த தாய், தந்தையைப் பார்த்துக் கொள்வதற்காகப் பள்ளி படிப்பை விட்டதாக ஒரு சில மாணவிகளும் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், “இளம் குற்றவாளிகளைத் தடுக்கும் வகையில் பள்ளி இடை நிற்றல் குழந்தைகளை "ஆப்ரேசன் ரீபுட்" என்ற பெயரில் மீண்டும் படிக்க வைக்கும் திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

கோவை மாநகரில் 173 குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளோம். 20 குழந்தைகள் வெளி மாநிலத்தில் உள்ளனர். இன்னும் 30 குழந்தைகளிடம் பேசி வருகிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நன்றி.

பள்ளி குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும். மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடை நிற்றல் குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளோம். எதிர்கால வாய்ப்புகளை எடுத்துக்கூறி அவர்களைப் படிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

பொருளாதார காரணத்தினால் இடை நிற்றல் குழந்தைகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்து மீண்டும் படிக்க வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 3 மாதங்களுக்கு ஒருமுறை இடை நிற்றல் மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

கோவையில் தொடர்ச்சியாக நடைபெற்ற 3 வழிப்பறி சம்பவங்களைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளோம். ரயிலில் வந்து இறங்கிய கும்பல் இந்த செயல்களில் ஈட்டுப்பட்டுள்ளது. அவர்களை நெருங்கிவிட்டோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்கள்.. விமானம் மூலம் சென்னை திரும்பினர்!

ABOUT THE AUTHOR

...view details