கோயம்புத்தூர்:கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நான்கு தளங்கள் கொண்ட இந்த கடையில் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளிப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கடந்த நவ.27 ஆம் தேதி இரவு வழக்கம் போல் கடை ஊழியர்கள் கடையை பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து, நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த ஏசி வெண்டிலேட்டர் வழியாகப் புகுந்து முதல் மாடி மற்றும் இரண்டாவது மாடிக்குள் இறங்கி, அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான கிலோ கணக்கில் தங்க நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர், வழக்கம் போல் நேற்று காலை கடை ஊழியர்கள் கடையை திறந்துள்ளனர். அப்போது நகைகள் திருடு போனது தெரியவந்துள்ளது. பின் இது குறித்து தகவல் கடை மேலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை மாநகர தெற்கு போலீஸ் துணை ஆணையர் சண்முகம் தலைமையிலான அதிகாரிகள் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர்.