தமிழ்நாடு

tamil nadu

"திமுக விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்யும் கட்சி" - வானதி சீனிவாசன் கடும் தாக்கு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 3:59 PM IST

Vanathi Srinivasan: திமுக விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்யும் கட்சி என விமர்சித்த வானதி சீனிவாசன் எம்எல்ஏ, நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை திமுக அரசு தற்கொலைக்கு தூண்டுகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: கோவை டவுன்ஹால் பகுதியில் ஆயுஸ்மான் பாரத் திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “தமிழ்நாட்டில் 1.25 கோடி மக்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தால் மக்கள் பயன் பெற சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இணைந்து, இன்று முதல் முகாம் துவங்கி உள்ளோம்.

இந்த முகாம்களை கோவை தெற்கு தொகுதியில், ஒவ்வொரு பகுதியிலும் நடத்த திட்டமிட்டு உள்ளோம். இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீட்டு அட்டை அனைவருக்கும் கிடைக்க மாநில அரசு தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என்‌ மக்கள்’ பயணம் முதற்கட்டத்தை நிறைவு செய்து, அடுத்த கட்டம் மேற்கு மண்டலத்திற்கு வர உள்ளது.

கோவையில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் இந்த யாத்திரை நடைபெறும். அண்ணாமலையின் இந்த பயணம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த யாத்திரை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற பிறகு, பாஜகவின் செயல்பாடு பல மடங்கு அதிகரித்து உள்ளது. இந்த பயணம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு உற்சாகம், புத்துணர்வை அளிக்கும்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பை எடுத்தால் மாமன்ற உறுப்பினர்கள் மிரட்டுகிறார்கள். போர்வெல் போட வசூல் செய்கிறார்கள். வீடு கட்டுவதற்கு தனியாக பணம் வசூல் செய்கிறார்கள். கோவை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் நலனுக்காக, லஞ்சம் கேட்டால் உதவி செய்ய ஹெல்ப் லைன் ஆரம்பிக்க முடிவு செய்து உள்ளோம்.

அதற்கான தொடர்பு எண் இரண்டு நாளில் அறிவிக்கப்படும். தேர்தலில் ஒரு கட்சி மற்றும் தலைவர் எங்கு போட்டியிடுவது என்பது அவர்களின் விருப்பம். பிரதமர் எங்கு போட்டியிடுகிறார் என்பதை கட்சித் தலைமை அறிவிக்கும். திருமண விழாக்களில் மணமக்களை வாழ்த்துவதை தவிர, மற்ற வேலைகளை முதலமைச்சர் செய்கிறார்.

திமுக விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்யும் கட்சி. அப்பழுக்கற்ற பிரதமரை குறை சொல்ல திமுகவிற்கு தகுதியில்லை. பிரதமர் நேர்மையை விமர்சிக்க திமுகவிற்கு தகுதியில்லை. 100 பேரில் 4 பேருக்குத்தான் மகளிர் உரிமைத்தொகை வருகிறது. அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை கொடுக்க வேண்டும்.

அப்படி அறிவித்தால், நானே பூத்களில் அமர்ந்து அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வாங்கித் தருகிறேன். பாஜக கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது டிசம்பர் மாதத்தில் தெரியும். அப்போது எத்தனை‌ புது நண்பர்கள் கிடைக்கிறார்கள் என்பதை பாருங்கள். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தாண்டி யார் முடிவு எடுப்பார் எனத் தெரியவில்லை.

அதிமுக - பாஜக கூட்டணியில் முரண்பாடு இல்லை. ஊடகங்கள் குழப்பாமல் இருந்தால் போதும். நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதி என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். மாணவர்கள் வன்முறையை கையில் எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சாதி ரீதியாக குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள்.

நீட் விஷயத்தில் போராடுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களைத் தூண்டுகிறார். திமுக அரசும், அமைச்சர்களும் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவி செய்யாமல், தற்கொலைக்கு தூண்டுகிறார்கள். அதிமுக நீட்டை எதிர்த்தாலும், மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள். திமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:Seeman: தமிழ்நாட்டில் மோடி எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் - சீமான்

ABOUT THE AUTHOR

...view details