தமிழ்நாடு

tamil nadu

குப்பைத் தொட்டியில் உணவு தேடும் பாகுபலி யானை: வனத்துறையின் நடவடிக்கை என்ன?

By

Published : May 29, 2023, 4:04 PM IST

உணவு தேடி ஊருக்குள் சுற்றி வரும் பாகுபலி யானை என்ற ஒன்று குப்பைத் தொட்டிக்குள் உணவை தேடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Coimbatore elephant
பாகுபலி யானை

கோவையில் குப்பைத் தொட்டியில் உணவு தேடும் பாகுபலி யானை: நடவடிக்கை எடுக்கப்படுமா?

கோயம்புத்தூர்: மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேட்டுப்பாளையம் வனச்சரகம் அமைந்துள்ளது. இது கேரளாவில் இருந்து நீலகிரிக்கு யானைகள் வலசை செல்லும் முக்கிய யானை வழித்தடமாக மேட்டுப்பாளையம் கல்லாறு வனப்பகுதி உள்ளது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் வனச்சரகம் அருகே பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதி உள்ளதால் சிறுமுகை வனச்சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும்.

அதுமட்டுமின்றி கோடை காலங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் காணப்படும். இந்த நிலையில் இவ்வாறு சிறுமுகை வனப்பகுதிக்கு வந்த ஆண் காட்டு யானை ஒன்று சிறுமுகை வனப்பகுதியிலேயே தங்கிவிட்டது. அங்கிருந்து மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு அடிக்கடி வந்து சென்றும் இருந்தது. யானையின் ஆஜானுபாகுவான உடல் அமைப்பு நீண்ட தந்தம் இவற்றை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த ஆண் காட்டு யானைக்கு பாகுபலி என பெயரிட்டு அழைத்து வந்தனர்.

மேலும், அந்த யானை விவசாய பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தியதால் இட மாற்றம் செய்ய வேண்டும் என மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொறுத்தி கண்காணிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அத்திட்டம் தோல்வி அடைந்ததால் அதனை கைவிட்டனர்.

ஆனால், தொடர்ந்து பாகுபலி யானையானது மாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானை நாள்தோறும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும்போது பத்திரகாளியம்மன் கோயில் சாலை சமயபுரம் பகுதி வழியாக கடந்து செல்வது வழக்கம். ஆகையால் அதனை நாள்தோறும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த பாகுபலி யானை சமயபுரம் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் இருந்த கழிவுகளை உட்கொண்டது. இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை அங்கிருந்து விரட்டினர். இந்த நிகழ்வை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து, அந்த காட்சிகள் தற்போது சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.

இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், "பல வருடங்களாக இந்த பாகுபலி யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து விவசாய நிலங்களில் புகுந்து சேதம் செய்து வருகிறது. இதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை. இவ்வாறு நாள் தோறும் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் யானையால் மக்களுக்கோ, மக்களால் யானைக்கோ பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

எனவே வனத்துறையினர் சிறப்பு கவனம் எடுத்து இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். மேலும் இந்த யானை குப்பைகளில் உள்ள கழிவுகளையும் சாப்பிட தொடங்கியுள்ளதால் யானையின் உடல் நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது" என தெரிவித்தனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "பாகுபலி யானையின் நடமாட்டத்தை வனத்துறை பணியாளர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். யானை நாள்தோறும் வந்து செல்லக்கூடிய பாதையில் உள்ள குப்பை தொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றோம். யானை வரும்போது அதனை பொதுமக்கள் தொந்தரவு செய்யக்கூடாது" என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Arikomban Elephant: பொதுமக்களால் அரிக்கொம்பன் அச்சம் - அமைச்சர் மதிவேந்தன்

ABOUT THE AUTHOR

...view details