கோயம்புத்தூர்:கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தொலைத்த, மற்றும் பொதுமக்களிடம் இருந்து திருடப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட 205 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (டிச.5) நடைபெற்றது. இதில் மீட்கப்பட்ட செல்போன்களை பத்ரி நாராயணன், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும் பொதுமக்கள் அனைவரும் தங்களது உடைமைகளை மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என சில அறிவுரைகளையும் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு 10 வேண்டுகோள்களை முன்வைக்கிறோம் எனவும், புத்தாண்டு வரும் பொழுது பலரும், Resolution எடுப்பார்கள், அவ்வாறு எடுப்பவர்கள் இதனையும் கடைபிடிப்பார்கள் என நம்புவதாக கூறினார். அதன்படி, பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளுக்கு Safe Touch குறித்து சொல்லி தர வேண்டும், இளம்பருவ குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் அனைவரும் நாள்தோறும் சில நிமிடங்களாவது அவர்களுடன் நேரம் செலவழித்து வாழ்க்கை குறித்து கலந்துரையாட வேண்டும் என்றார்.
இந்த வருடத்தில் மட்டும் 40 கொலைகள் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதில் 12 கொலைகள் குடும்பத்திற்குள்ளும், மேலும் சில கொலைகள் நண்பர்களுக்குள் நடந்ததாக தெரிவித்தார். இவை அனைத்தும் கோபத்தின் வெளிபாடு எனக் கூறிய அவர், கோபம் வரும்போது இரண்டு நிமிடம் யோசித்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்ட வேண்டாம், வாகனங்கள் ஓட்டும்போது செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். சமீப காலமாக, கோவையில் ஆன்லைன் மோசடிகள், வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யும் குற்றங்கள் நடப்பதாக கூறிய அவர், இதுபோன்ற மோசடிகளில் மக்கள் ஏமாற வேண்டாம் எனவும்; நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை இதுபோன்று வீணடிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.
இந்த வருடம் மட்டும் ரூ.18 கோடி பணத்தை கோவை மாவட்ட மக்கள் சைபர் கிரைம் குற்றவழக்குகளில் இழந்துள்ளதாக கூறிய அவர், பொதுமக்கள் தெரியாத வலைதளங்களை பயன்படுத்த வேண்டாம், டெலிகிராம் லிங்க்குகளில் சேர வேண்டாம், பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என எச்சரித்தார்.