கோவை மாநகரில் போதைப்பொருட்கள் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் கோவை மாநகர போலீசார், 10 லட்சம் மதிப்பிலான 156 கிலோ கஞ்சா சாக்லேட்கள் இன்று (பிப்.3) பறிமுதல் செய்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசாருக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.
போதைப்பொருட்களின் பயன்பாட்டை ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நீலாம்பூர் பகுதியில் போதை தரக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இன்று (பிப்.3) சோதனை மேற்கொண்டனர்.
அப்போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் திலீப்குமார்(38) என்பவரை கைது செய்தனர். அத்தோடு, அவரிடமிருந்து 10 லட்சத்து 81 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள 156 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இதனைப் பாராட்டும் விதமாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேரில் சென்று தனிப்படை காவல்துறையினரை பாராட்டினார்.