சென்னை: சென்னையைச் சேர்ந்த விகாஷ் என்பவர் சொமெட்டோ மூலம் நேற்று (அக்.18) உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவு டெலிவரியில் ஏற்பட்ட தவறு குறித்து புகார் அளித்து பணத்தைத் திருப்பி அளிக்க கேட்டு சொமெட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியுள்ளார்.
அப்போது வாடிக்கையாளர் சேவை மைய முகவர் ஒருவர், "உங்கள் புகார் குறித்து உணவகத்தைத் தொடர்புகொண்டோம், மொழி தெரியாததால் உங்களது பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை எனக் கூறியும் இந்தி நமது தேசிய மொழி. அதனால், ஒவ்வொருவருக்கும் ஓரளவாவது கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
கண்டனம்
இந்த உரையாடல் பதிவை விகாஷ் ட்விட்டரில் பதிவிட #Reject_Zomato என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி பலரும் கண்டனம் தெரிவித்தனர். அரசியல் தலைவர்கள் முதல் பல்வேறு தரப்பினரும் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து விமர்சித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டுவருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை" என்று அழுத்தமான தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இதையடுத்து இன்று (அக்.19) செமெட்டோ நிறுவனம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை முகவரை பணிநீக்கம் செய்தும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் விகாஷிடம் மன்னிப்பு கூறி தமிழில் அறிக்கை வெளியிட்டது.
தமிழர்களின் மரபு சுயமரியாதையே
இந்நிலையில் விகாஷ் தனது ட்விட்டரில், வாடிக்கையாளர் சேவை முகவர் பணிநீக்கம் செய்யப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள், பணிநீக்கம் செய்யாமல் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காதவாறு முகவருக்கு பயிற்சி அளியுங்கள், தமிழர்களின் மரபு சுயமரியாதையே தவிர பழிவாங்குதல் அல்ல என்று சொமெட்டோ நிறுவனத்திடம் கூறியுள்ளார்.