தமிழ்நாடு

tamil nadu

வெளிநாட்டில் விபத்தில் சிக்கிய மகன்.. போராடி மீட்ட தாய்..!

By

Published : Apr 15, 2023, 6:23 PM IST

வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், அங்கு விபத்தில் சிக்கியதால், தாயின் நான்கு மாத போராட்டத்திற்குப் பிறகு சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.

4 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டில் விபத்துக்குள்ளான இளைஞர் சென்னை வருகை!
4 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டில் விபத்துக்குள்ளான இளைஞர் சென்னை வருகை!

வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், அங்கு விபத்தில் சிக்கியதால், தாயின் நான்கு மாத போராட்டத்திற்குப் பிறகு சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்

சென்னை:புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகரில் சுப்பையா - அழகி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீரபாண்டி (25) மற்றும் அழகு பெருமாள் (22) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், சுப்பையா கட்டட வேலை செய்து கொண்டிருக்கும்போது, சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். எனவே குடும்ப வறுமையைப் போக்குவதற்காக, அவரது மூத்த மகன் வீரபாண்டி, கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரியில் பஹ்ரைன் நாட்டுக்கு வேலைக்காகச் சென்றுள்ளார்.

தொடர்ந்து அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஸ்டோர் கீப்பராக 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பதன் அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே கடந்த டிசம்பர் 7ஆம் தேதி, வழக்கம்போல் பணி முடித்து விட்டு, தான் தங்கியிருக்கும் அறைக்கு வீரபாண்டி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் மீது, கனரக வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளானார். இதனையடுத்து, அவர் பஹ்ரைன் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் வீரபாண்டிக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறித்து, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, எப்படியாவது தனது மகனை சென்னைக்கு அழைத்து அழைத்து வர வேண்டும் என பெற்றோர் எண்ணி உள்ளனர். ஆனால், சென்னைக்கு அழைத்து வர வேண்டும் என்றால், லட்சக்கணக்கில் பணம் செலவாகும் என்றும், அவ்வளவு பணம் இல்லாததால் வேதனை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்து வெளிநாடுவாழ் தமிழர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு, சமூக ஆர்வலர் ஒருவர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 4 மாத போராட்டத்திற்குப் பிறகு விமானம் மூலம் வீரபாண்டியை சென்னைக்கு அழைத்து வந்தனர். அப்போது தன் மகனைப் பார்க்க அவரது தாயார், ஓடி வந்து தன் மகனை கட்டி அணைத்து கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது. இதனையடுத்து விமான நிலையத்தில் இருந்து, ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக வீரபாண்டியை அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஏசி இயந்திரம் விழுந்து ஊழியர் பலி!

ABOUT THE AUTHOR

...view details