தமிழ்நாடு

tamil nadu

மெரினாவில் பிறந்தநாள் கொண்டாட சென்ற இளைஞர் கொலை.. நடந்தது என்ன?

By

Published : Apr 21, 2023, 12:24 PM IST

மெரினாவில் பிறந்தநாள் கொண்டாட வந்த வாலிபரை கடையில் திருட வந்ததாக நினைத்து கடை ஊழியர் அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மெரினாவில் பிறந்தநாள் கொண்டாட சென்ற இளைஞர் கொலை.. நடந்தது என்ன?
மெரினாவில் பிறந்தநாள் கொண்டாட சென்ற இளைஞர் கொலை.. நடந்தது என்ன?

சென்னை: மெரினா கடற்கரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் மூன்று வாலிபர்கள் படுகாயங்களுடன் கிடப்பதாக அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் அண்ணா சதுக்கம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று படுகாயத்துடன் இருந்த மூன்று வாலிபர்களையும் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவர்கள் அவர்களுக்குச் சிகிச்சை அளித்த போது மூன்று பேரில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், மற்ற இருவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் இறந்த நபர் ஆவடியைச் சேர்ந்த விக்னேஷ்(20) என்பதும் படுகாயமடைந்த நபர்கள் அரவிந்தன் (22) மற்றும் சஞ்சய் (18) என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் இன்று சஞ்சய் என்பவருக்குப் பிறந்தநாள் என்பதால் அதைக் கொண்டாட நேற்றிரவு அவரது நண்பர்களான விக்னேஷ், அரவிந்தன் உட்படப் பலர் இருசக்கர வாகனத்தில் மெரினா பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சென்றுள்ளனர். அப்போது சர்வீஸ் சாலையில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடற்கரைக்குச் சென்று சஞ்சயின் பிறந்தநாளை அனைவரும் கொண்டாடிவிட்டு பின்னர் 2.30 மணியளவில் வீட்டிற்குக் கிளம்புவதற்காக வந்துள்ளனர்.

அப்போது சர்வீஸ் சாலையில் அமைந்துள்ள கடையின் அருகே விக்னேஷ் வைத்த ஹெல்மெட்டை காணவில்லை என நீண்ட நேரமாகத் தேடியதாகக் கூறப்படுகிறது. இதனை கண்ட கடை ஊழியர்கள் திருட வந்திருப்பதாக நினைத்து, அந்த நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறிய நிலையில் கடை ஊழியர்கள் அங்கிருந்த கட்டையால் விக்னேஷ், சஞ்சய் மற்றும் அரவிந்தன் ஆகியோரை தாக்கிவிட்டுச் சென்றதாக தெரிகிறது. இதில் மூவரும் படுகாயமடைந்து விக்னேஷ் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கடை ஊழியர்கள் மூன்று பேரைப் பிடித்து நடந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மதுபோதையில் தாயை அடித்த நபரை கொடூரமாக தாக்கிய இளைஞர்.. வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details