தமிழ்நாடு

tamil nadu

உங்கள் கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுப்பெறுங்கள் - மத்திய நிதியமைச்சருக்கு எம்பி சு.வெங்கடேசன் பதில்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 2:40 PM IST

Su Venkatesan MP: மழை வெள்ள அபாயத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டோம் என்ற திசை திருப்பும் கருத்தை வாபஸ் பெறுங்கள் அல்லது இந்த கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுப் பெறுங்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதிலளித்துள்ளார்.

Venkatesan MP requested to withdraw Nirmala Sitharaman misleading statement
நிர்மலா சீதாராமன் அவரின் தவறான கருத்தை திரும்பப் பெற வேண்டும் என எம்.பி சு. வெங்கடேசன் கோரிக்கை

சென்னை:தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. இந்த நிலையில், வரலாறு காணாத இந்த அதி கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகளில், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து நேற்று (டிச.22) டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என டிசம்பர் 12ஆம் தேதி முதலே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததாகவும், மழை பாதித்த அன்று கூட 3 மணி நேரத்துக்கு ஒரு முறை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வந்ததாகவும், ஆனால் அதனை மாநில அரசும், அமைச்சர்களும் பொருட்படுத்தவில்லை எனக் கூறினார்.

மேலும், இன்ச் பை இன்ச் எவ்வளவு மழை பெய்யும் என்று சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பிய அவர், கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்த பிறகும்கூட, மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் எடுக்காமலிருந்தது ஏன் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.

மேலும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக செலவு செய்த ரூ.4,000 கோடி எங்கே போனது என்றும், 92 விழுக்காடு பணிகளை முடித்துவிட்டதாகக் கூறி, பின்னர் கேள்வி எழுந்ததை அடுத்து 45 விழுக்காடு பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகக் கூறியது ஏன் எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக கூறினார்.

இதையடுத்து, நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையாகியது. இது தொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது X வலைத்தளத்தில், “நான்கு மாவட்ட மழைவெள்ளத்தைப் பற்றி 12ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது என்கிறார், நிதியமைச்சர். அப்படியென்றால், 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு காசி தமிழ்ச்சங்க ரயிலின் துவக்க விழாவை பிரதமரே நடத்தி வைத்தாரே எப்படி?

கொட்டும் பேய்மழையில் எண்ணிலடங்கா பயணிகளை பணயம் செய்ய வைத்தாரே எப்படி? அன்றைய தினம் கடும் மழையால் தென் மாவட்டங்களில் பல ரயில்களை ரத்து செய்ய முடியாமல் போனதற்கு, இவ்விழாவே காரணம் என ரயில்வே அதிகாரிகள் பலர் புலம்பியதை அறிவீர்களா? வானிலையின் இவ்வளவு பெரிய எச்சரிக்கையை மீறி செந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 7 மணிக்கு புறப்பட்டதும், ஶ்ரீவைகுண்டத்தில் அது சிக்கிக்கொண்டு பயணிகள் இரண்டு நாட்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானதற்கும் யார் பொறுப்பு?

தனது அரசின் கீழ் இயங்கும் வானிலை அறிக்கையை அறியாத பிரமதமரா? அல்லது என்னவானாலும் என்ன, தமிழ்நாட்டு மக்கள்தானே என்ற மனநிலையா? நிதியமைச்சரே, மழை வெள்ள அபாயத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டோம் என்று தாங்கள் சொன்ன திசைதிருப்பும் கருத்தை வாபஸ் பெறுங்கள். இல்லையென்றால் இந்த கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுப்பெறுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 'மரியாதைக்குரிய' அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details