தமிழ்நாடு

tamil nadu

'வீரபாண்டி ராஜா மறைவு தூண் சாய்வதுபோல' - பிறந்த நாளிலேயே மரணம்!

By

Published : Oct 2, 2021, 12:33 PM IST

வீரபாண்டி ராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல; தூண் சாய்வதுபோல என வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வீரபாண்டி ராஜா
வீரபாண்டி ராஜா

சேலம்: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் படத்திற்கு மாலை அணிவிக்கும் தருவாயில், மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.

இவரின் மறைவுக்குப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ”சேலத்துச் சிங்கம் வீரபாண்டியாரின் மகனும் - சேலம் மண்டலத்தில் கழகம் வளர்க்கும் வீரனாகவும் வலம்வந்தவர் வீரபாண்டி ராஜா.

வீரபாண்டி ராஜா

அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர்

இனிமையாய் பழகியும் அருமையான குணத்தாலும் அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர் ராஜா. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதனைத் திறம்படச் செய்து முடிக்கக் கூடியவர்.

இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், மாவட்டச் செயலாளர், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எனக் கழகப் பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டதோடு சட்டப்பேரவை உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவர் ராஜா.

வீரபாண்டி ராஜா

இரண்டு நாள்களுக்கு முன்னால் சேலத்துக்கு அரசு விழாவுக்குச் சென்றிருந்தபோதுகூட வீரபாண்டி ராஜாவைச் சந்தித்தேன். அன்போடு பேசிக்கொண்டிருந்தேன். அந்த வெள்ளை உள்ளம் கொண்ட புன்சிரிப்பை மறக்க முடியவில்லை.

வீரபாண்டி ராஜா மறைவு தனிமனித மறைவு அல்ல

மிக இளமைக் காலத்தில் செழியனை இழந்தோம். மருத்துவமனை வாசலில் கருணாநிதியே வாய்விட்டுக் கதறும் அளவுக்கு நம்மை விட்டுப் பிரிந்தார் வீரபாண்டியார். இதோ இப்போது வீரபாண்டி ராஜா. வீரபாண்டியார் குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது? என்னை நானே எப்படித் தேற்றிக் கொள்வது?

வீரபாண்டி ராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல; தூண் சாய்வது போல! எந்நாளும் அவர் புகழ் நிலைத்திருக்கும். கழகத் தொண்டர்கள் மனத்தில் எந்நாளும் ராஜா வாழ்வார். வீரபாண்டியார் குடும்பத்துக்கும் கழகச் செயல்வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டாலின் சேலம் வருகை

மேலும், மு.க. ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தனி விமானம் மூலம் மதியம் 2.15 மணிக்கு சேலம் வருகிறார். சேலம் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் புறப்பட்டு பூலாவரி வருகிறார்.

வீரபாண்டி ராஜா

அங்கு வீரபாண்டி ராஜா இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று ராஜாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து 4.15 மணிக்கு சேலம் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

இதையும் படிங்க : வீரபாண்டி ராஜா காலமானார் - பிறந்தநாளில் சோகம்

ABOUT THE AUTHOR

...view details