தமிழ்நாடு

tamil nadu

அரசு ஊழியர்களுக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை - வானதி சீனிவாசன்

By

Published : Apr 26, 2023, 4:06 PM IST

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பது விஏஓ கொலையில் இருந்து தெரிய வந்துள்ளதாக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை - வானதி சீனிவாசன்
அரசு ஊழியர்களுக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை - வானதி சீனிவாசன்

சென்னை:இது தொடர்பாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அவரது அலுவலகத்திலேயே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.

ஏப்ரல் 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணி, பொதுமக்களிடம் அச்ச உணர்வைப் போக்கி இருக்கிறது, திமுக அரசு. எந்த வித குறுக்கீடும் இன்றி காவல் துறையை செயல்பட அனுமதித்துள்ளோம். இதனால்தான் சமூக விரோதிகள், கொள்ளையர்கள், வன்முறையாளர்கள் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள்’ என்றார்.

ஆனால், அவர் பேசி முடித்த நான்கு நாட்களுக்குள் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர், அவரது அலுவலகத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு இதை விடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

மணல் கொள்ளையைத் தடுக்க முயன்றதால்தான் கிராம நிர்வாக அலுவலர் கொல்லப்பட்டுள்ளார் என்று வரும் செய்திகள், தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு மணல் மாஃபியாக்களின் ஆதிக்கம் இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் மணல், கற்கள் போன்ற கனிமங்கள், தங்கத்தை விட மதிப்பு மிக்கதாக மாறி இருக்கின்றன.

எனவே, மணல் உள்ளிட்ட கனிம வளங்களுக்காக எதையும் செய்ய, அந்த வணிகத்தில் உள்ள மாஃபியாக்கள் தயாராக உள்ளனர் என்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் படுகொலையே உதாரணம். மணல் கொள்ளையர்கள் உடன் அதிகார வர்க்கம் கூட்டணியில் உள்ளது. அதனால்தான், லூர்து பிரான்சிஸ் போன்ற நேர்மையான அரசு அலுவலர்கள் தங்களது உயிரையும் இழக்க நேரிடுகிறது.

கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால், இட மாறுதல் கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனாலும், அவருக்கு மணல் கொள்ளை நடந்து வரும் பகுதியிலேயே பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த படுகொலைக்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

லூர்து பிரான்சிஸை படுகொலை செய்த கொடியவர்களை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும். மணல், கற்கள் உள்ளிட்ட கனிம வளக் கொள்ளையைத் தடுக்க தமிழ்நாடு அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு, சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பது மிகவும் அத்தியாவசியமானது.

அதில் கோட்டை விட்டுவிட்டால், தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். யாரும் முதலீடு செய்ய வர மாட்டார்கள். இதனை உணர்ந்து சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, காவல் துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தூத்துக்குடி விஏஓ வெட்டிக்கொலை: அமைச்சர்கள், கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல்!

ABOUT THE AUTHOR

...view details