தமிழ்நாடு

tamil nadu

திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு சுடர் ஓட்டம்.. உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 11:04 AM IST

DMK Youth Wing : திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டு சுடர் ஓட்டத்தை, இன்று சென்னையில் இருந்து இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Udhayanidhi Stalin launched DMK Youth wing second conclave Fire run
திமுக இளைஞரணி மாநாடு சுடர் ஓட்டம்

சென்னை:சேலத்தில் வருகிற 21ஆம் தேதி திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், மாநாட்டு சுடர் ஓட்டத்தை திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து, இன்று (ஜன.18) காலை 7 மணிக்கு துவக்கி வைத்தார். முன்னதாக அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

தற்போது எல்.ஐ.சி சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு, அண்ணா மேம்பாலம், அறிவாலயம், அன்பகம், சைதாப்பேட்டை, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம் வழியாகச் செல்லும் மாநாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக, சுமார் 316 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை வருகிற ஜன.20ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி அளவில் சென்றடைகின்றது.

அதனைத் தொடரந்து, இந்த மாநாட்டுச் சுடரை, அன்று மாலையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்க உள்ளார். இந்த மாநாட்டுச் சுடர் ஓட்டம் செல்லும் இடங்களில் எல்லாம், அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாநாட்டுச் சுடரை ஏந்திச் செல்கின்றனர்.

மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, கே.இ.பிரகாஷ், ப.அப்­துல்­மா­லிக், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.பிரதீப் ராஜா, சி.ஆனந்த குமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில், "பாசிச இருளகற்றி ஒட்டு மொத்த இந்தியாவுக்கே வெளிச்சத்தை தரவுள்ள நம் திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாநாட்டுத் திடல் நோக்கிய சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் - அண்ணா - கருணாநிதி திருவுருவச் சிலைகளுக்கு அருகே இன்று தொடங்கி வைத்தோம்.

இந்த சுடர், சென்னை - காஞ்சிபுரம் - விழுப்புரம் - கள்ளக்குறிச்சி - சேலம் மாவட்ட இளைஞர் அணியினரால் மாநாடு நடைபெற இருக்கிற சேலம் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு கொண்டு சேர்க்கப்பட உள்ளது. சேலம் மாநாட்டுத் திடலில் வரும் ஜனவரி 20ஆம் தேதி மாலை, இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்களால் என்னிடம் வழங்கப்படவுள்ள இந்த மாநாட்டுச் சுடரை, திமுக தலைவர், முதலமைச்சரிடம் ஒப்படைக்கவுள்ளேன்.

கடந்த 9 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட நம் மாநில உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியோடு உழைப்போம். இளைஞர் அணி மாநாட்டின் வெற்றிக்கு சேலத்தை நோக்கி அணிவகுப்போம் - பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவோம்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காணும் பொங்கலன்று மெரினா கடற்கரையில் காணாமல் போன குழந்தைகள் 20 நிமிடங்களில் கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details