தமிழ்நாடு

tamil nadu

சென்னை விமான நிலையத்தில் 2.4 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் - இரண்டு பெண்கள் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 8:13 AM IST

Gold Smuggling in Chennai Airport: பெங்களூரில் இருந்து சென்னை வந்த உள்நாட்டு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புடைய கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பெண் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உள்ளநாட்டு விமானத்தில் கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்
உள்ளநாட்டு விமானத்தில் கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்

சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' உள்நாட்டு விமானம், நேற்றைய முன்தினம் (நவ.21) இரவு சென்னை உள்நாட்டு விமான நிலையம் முதல் முனையத்துக்கு வந்தது. அந்த விமானத்தில் இரண்டு பெண்கள், பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அத்தகவலின் அடிப்படையில், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் உள்நாட்டு முனையத்திற்கு விரைந்து வந்து, விமானத்தில் வந்த பயணிகளைக் கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண் பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, இரண்டு பெண் பயணிகளையும் நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அப்போது, அந்தப் பெண் பயணிகள் தாங்கள் உள்நாட்டு விமானத்தில் பெங்களூரில் இருந்து சென்னை வருவதாகவும், தங்களை நிறுத்தி எப்படி சோதனை நடத்தலாம் என்றும் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை பொருட்படுத்தாத சுங்கத்துறை அதிகாரிகள், அந்த இரண்டு பெண் பயணிகளை அவர்களது உடைமைகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, அவர்களுடைய சூட்கேஸைத் திறந்து பார்த்து சோதனை செய்ததில், அந்த சூட்கேஸில் ரகசிய அறை இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். அதை சோதித்ததில், 2.4 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் தங்கத் தகடுகள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அந்தத் தங்கத்தின் சர்வதேச மதிப்பு 1.5 கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

அதனை அடுத்து, இரண்டு பெண் பயணிகளையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து, அவர்கள் கடத்தி வந்து 1.5 கோடி ரூபாய் மதிப்புடைய 2.4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த தங்கக் கட்டிகளை எந்த நாட்டில் இருந்து பெங்களூருக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டது, அந்த பெண்களிடம் தங்கக் கட்டிகளைக் கொடுத்த கடத்தல் கும்பல் எது, இவர்கள் இந்த தங்கக் கட்டிகளை சென்னையில் யாரிடம் கொடுக்க எடுத்து வந்தனர் போன்ற கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆளுநர் மாளிகை முன் குண்டு வீச்சு: கருக்கா வினோத்தை 7 நாள் காவலில் எடுக்க என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு!

ABOUT THE AUTHOR

...view details