தமிழ்நாடு

tamil nadu

வீழ்ச்சியை காணும் தக்காளி விலை.. சென்னையில் ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

By

Published : Aug 5, 2023, 1:54 PM IST

சென்னையில் கடந்த சில வாரங்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுவதால் சென்னைவாசிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

ஒரு கிலோ தக்காளியின் விலை என்ன?
தக்காளி விலை அதிரடியாக குறைப்பு

சென்னை: சென்னை மற்றும் கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவிலிருந்தும் நாள் ஒன்றுக்கு சுமார் 470 லோடு காய்கறிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது. அவற்றில் முக்கியமான ஒன்றாக தக்காளியும், வெங்காயமும் உள்ளது. தக்காளி மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 1,050 டன் விற்பனைக்காகக் கொண்டுவரப்படும் நிலையில் கடந்த சில தினங்களாக வெறும் 400 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்தது.

பங்குச் சந்தை நிலவரம் போன்று தக்காளியின் விலை சில நாட்களாக சில்லறை விற்பனையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு முதல் ரகம் தக்காளி 150 க்கும், இரண்டாம் ரகம் 140 க்கும், மூன்றாம் ரகம் 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தக்காளியின் விலை ஜூலை-31 ஆம் தேதி அன்று வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சமாக சில்லறை விற்பனையில் கிலோவிற்கு ரூ.210 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலை மக்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திடீர் தக்காளி உயர்வு சிறு சிறு ஹோட்டல்கள் மற்றும் சாலையோர உணவு கடை வைத்திருப்பவர் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தக்காளியின் விலை சிறிது கருணை காட்டி குறைய தொடங்கியுள்ளது.

இன்று(சனிக்கிழமை) தக்காளியின் வரத்து கூடுதலாக 100 டன் வந்த நிலையில் தக்காளியின் விலை கோயம்பேடு காய்கறி சந்தையின் மொத்த விலையில் அவற்றின் ரகத்திற்கு ஏற்றது போல் கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது தக்காளி விலை குறைப்பு குறித்து கோயம்பேடு காய்கறி,கணி மொத்த வியாபார சங்கத்தின் நிர்வாகி சுகுமார் கூறியதாவது,"தக்காளி விளைச்சல் அதிகமாக இருந்த நேரத்தில் கோயம்பேடு சந்தைக்கு 60 முதல் 80 வண்டிகளில் நாளொன்றுக்கு 800 டன் முதல் 1000 டன் வரை தக்காளி விற்பனைக்கு வரும். ஆனால், தற்போது விளைச்சல் குறைவால் 300 டன் வரை மட்டுமே சில தினங்களாக வந்தது . இதனால் தக்காளின் விலை அதிகரித்து காணப்பட்டது" என்றார்

மேலும், "தொடர்ந்து ஜூலை 31 அன்று வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்து சற்று குறைந்துள்ளது. நாட்டு தக்காளி, நவீன தக்காளி ஆகிய ரக தக்காளியின் வரத்து குறைந்ததால் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3 வரை தக்காளி விலை உச்சத்தில் இருந்தது. ஆனால் இன்று(05.07.2023) தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 40 லாரிகளில் தக்காளி வந்தது. தக்காளியின் வரத்து அதிகரித்த நிலையில் தக்காளி விலை ரகத்திற்கு ஏற்றது போல் கிலோவிற்கு ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் தக்காளி சில்லறை விற்பனையின் ரூ.110 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யபடுகிறது. இனி வரும் காலங்களில் தக்காளி வரத்து அதிகரிக்க வாய்புள்ளது" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னையில் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.. எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details