சென்னை: சூளைமேடு சக்தி நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 46). திருமணமாகாத இவர் ஜாம்பஜார் பகுதியில் சுகுணா என்ற பெயரில் அவரது அண்ணி ஜெரினாவுடன் முட்டை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 24ஆம் தேதி) மாலை 5:45 மணி அளவில் சூளைமேட்டில் உள்ள சந்திரசேகர் வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று அவரை அடித்து காரில் ஏற்றி அழைத்து சென்றனர்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சந்திரசேகரின் அண்ணி ஜெரினா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின் சந்திரசேகரின் செல்போன் எண்ணை வைத்து நாமக்கல்லில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவரை மீட்டு, கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 31), மணி (வயது 39), பம்மல் பகுதியை சேர்ந்த முட்டை விநியோகஸ்தர் சரவணகுமார் (வயது 40) ஆகியோர் என்பது தெரிய வந்தது. கடத்தப்பட்ட சந்திரசேகர் நடத்தி வரும் முட்டை கடைக்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சரவணன் என்பவர் முட்டை விநியோகம் செய்து வந்தார்.
சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு உண்டான முட்டைகளை சரவணன் சிறுக சிறுக சந்திரசேகரனின் கடைக்கு விநியோகம் செய்து வந்த நிலையில், இரண்டு லட்ச ரூபாய் மட்டும் சரவணனுக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் மீதமுள்ள 8 லட்சம் ரூபாய் பாக்கியை சரவணன் பலமுறை சந்திரசேகரிடம் கேட்டபோது தருவதாக கூறி இழுத்தடித்து வந்துள்ளார். மேலும் சந்திரசேகர் முட்டை கடையை மூடிவிட்டு தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து சந்திரசேகரனை கடத்தி கொண்டு சென்று கடன் பாக்கி கேட்டு மிரட்டியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து சூளைமேடு போலீசார் கடத்திய மூன்று பேர் மீது கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.