தமிழ்நாடு

tamil nadu

Group 4 Results 2022:குரூப் 4 முடிவுகள் எப்போது?.. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

By

Published : Feb 14, 2023, 7:21 PM IST

Group 4 Results 2022: டிஎன்பிஎஸ்சி நடத்திய 2022-க்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

Group 4 Results 2022: சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் எனவும்; அதுவரை ஆதாரம் இன்றி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இன்று (பிப்.14) வெளியிட்ட செய்திக் குறிப்பில், ’தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், குரூப் 4 பணிகளுக்கான எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் 2022 ஜூலை 24ஆம் தேதி நடத்தியது.

இந்த தேர்விற்கு 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் தேர்வினை எழுதினார்கள். இந்திய அளவில் ஒப்பிடும்போது, அனைத்து தேர்வாணையங்களாலும் நடத்தப்பட்ட தேர்வுகளிலேயே மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வாணையத்தின் கடும் மந்த தன்மையை நிலைநிறுத்தும் பொருட்டு, எந்தவித தவறுகளும் இடம் அளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால் விடைத்தாள்களின் இரு பகுதிகளையும் தனித்தனியே இருமுறை ஸ்கேன் செய்து, அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் விடைத்தாள்களில் செய்துள்ள பிழைகளை கம்ப்யூட்டர் மூலம் அடையாளம் காணப்பட்டு, அவற்றை அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதி செய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது. விடைத்தாள்களில் தேர்வாணைய அறிவுரைகளை மீறி, தேர்வர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், 2022-ல் நடத்தப்பட்ட தேர்வில் 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்று உள்ளனர். இரு முறை விடைத்தாள்களின் இரு பாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து பிழைகள் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. அதன்படி மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளது. இது கடந்த தேர்வுகளை ஒப்பிடும்போது மும்மடங்கிற்கு கூடுதலான வேலையினை உள்ளடக்கியதாக உள்ளது.

இது போன்ற காரணங்களினால் இதே காலத்தில் தேர்வாணையம் பல்வேறு பணித்தேர்வுகளையும் மற்றும் துறை தேர்வுகளையும் தொடர்ந்து நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருவதாலும், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இடையறாது பணியாற்றி தேர்வின் அனைத்து மிக முக்கிய பணிகளையும் மிகுந்த கவனத்துடன் முடித்து எந்தவித தவறுக்கும் இடம் தராமல் இத்தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தேர்வர்கள் இத்தேர்வு குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரம் இல்லாத தகவல்களை பொருட்படுத்த வேண்டாம்' எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:TNPSC Group 4: குரூப்-4 தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுக - அன்புமணி வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details