தமிழ்நாடு

tamil nadu

பி.இ, பி.டெக் 2ஆம் சுற்று கலந்தாய்வு - விருப்பப்பதிவை தேர்வு செய்த மாணவர்களுக்கு தற்காலிக இட ஒதுக்கீடு வெளியீடு!

By

Published : Aug 14, 2023, 1:15 PM IST

பி.இ, மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கான 2ஆம் சுற்றில் விருப்பப்பதிவு செய்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் தற்காலிக இடங்களை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

engineering counselling
பி.இ, பி.டெக் 2ஆம் சுற்று கலந்தாய்வு

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்விற்கு மே 5ஆம்தேதி முதல் ஜூன் 4ஆம்தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 22ஆம்தேதி வெளியிடப்பட்டது.

மேலும், மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் மூன்று சுற்றுகளாக நடைபெறுகிறது. அதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 26 வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு ஜூலை 28 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு 442 கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 19 ஆயிரத்து 346 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 783 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது.

அதேபோல், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 12 ஆயிரத்து 59 இடங்களும் , தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 3 ஆயிரத்து 143 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு பிரிவினருக்கான விளையாட்டு பிரிவில் 385 மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல் சுற்று கலந்தாய்வு முடிவில் 16 ஆயிரத்து 64 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்தனர்.

இந்த நிலையில் 2ஆம் சுற்று கலந்தாய்வில் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 9 முதல் 11 வரை தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்தனர். மேலும், பொதுப்பிரிவின் தரவரிசைப் பட்டியலில் 22,762 முதல் 87,049 வரை உள்ள 64,332 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். முதல் கலந்தாய்வில் பங்கேற்ற பின்னர், இரண்டாம் சுற்று கலந்தாய்விற்கு 60 ஆயிரத்து 783 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 49 ஆயிரத்து 719 மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்திருந்தனர். அதில் 45ஆயிரத்து 816 மாணவர்களுக்கு கல்லூரியில் தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் உள்ள தரவரிசைப் பட்டியலில் 1075 முதல் 8586 வரை உள்ள 7952 மாணவர்களும், முதல் சுற்று கலந்தாய்வில் இடத்தை தேர்வு செய்யாமல் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் 279 மாணவர்களும், 6ஆயிரத்து 632 மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்ததில், 6ஆயிரத்து116 மாணவர்களுக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், மாணவர்கள் ஆகஸ்ட் 14 முதல் 19ம் தேதிக்குள் கல்லூரியில் சேரவோ, அல்லது தற்பொழுதைய ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டு, முன்னேறிய ஒதுக்கீட்டில் வேறு கல்லூரி கிடைத்தால் அதில் சேர்வதற்கு விரும்புகிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். முன்னேறிய ஒதுக்கீட்டினைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு 22ம் தேதி ஒதுக்கீட்டு இடங்கள் அறிவிக்கப்படும் என பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்து உள்ளது.

இதையும் படிங்க:"சில மாதங்களில் நீட் தடுப்புச் சுவர் உதிர்ந்து விழும்; இருவரது மரணமே இறுதியாக இருக்கட்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details