தமிழ்நாடு

tamil nadu

சிவகாசி வெடி விபத்து: "அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குக" - கே.எஸ். அழகிரி கோரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 5:44 PM IST

சிவகாசி அருகே இரு வேறு இடங்களில் நிகழ்ந்த வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டு உள்ள 3 லட்ச ரூபாய் நிதி உதவியை 5 லட்ச ரூபாயாக உயர்த்தி தமிழக முதலமைச்சர் வழங்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்து உள்ளார்.

சிவகாசி வெடி விபத்து நிவாரணம்
சிவகாசி வெடி விபத்து நிவாரணம்

சென்னை: சிவகாசி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேரும், மற்றொரு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ள 3 லட்ச ரூபாய் நிதி உதவியை 5 லட்ச ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி கோரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறுகிற விபத்துகளும், உயிரிழப்புகளும் நினைவுக்கு வருவது தொடர் கதையாகி வருகிறது. நேற்று (அக். 17) சிவகாசி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேரும், மற்றொரு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவரும் உயிரிழந்த சோக நிகழ்வு, அனைவரது நெஞ்சையும் உலுக்குவதாக இருக்கிறது.

விபத்துகள் நடைபெறாமல் இருக்க பட்டாசு தயாரிக்கும் ஆலைகளிலும், பட்டாசு விற்பனை நிலையங்களிலும் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்கின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மிகுந்த கண்காணிப்போடு எடுக்க வேண்டும். அங்கே வெடி விபத்தின் போது ஏற்பட்ட சத்தம் 3 கி.மீ. தூரத்திற்கு எதிரொலித்து இருக்கிறது.

இந்த சம்பவம் எப்படி ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்கிற போது, நேற்று (அக். 17) பிற்பகல் வெளியூரை சேர்ந்தவர்கள் வாங்கிய பேன்சி ரக பட்டாசுகளை கடையின் அருகே வைத்து வெடித்து பார்த்து உள்ளனர். அப்போது வெடித்து சிதறிய பட்டாசுகள் எதிர்பாராத விதமாக கடைக்குள் விழுந்ததனால், இத்தகைய பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது, அங்கே வேலை பார்த்த அப்பாவி தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி கருகிய கோரக் காட்சி மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. இத்தகைய கொடிய சம்பவங்களால் அப்பாவி ஏழை, எளிய மக்கள் தான் அவர்களது உயிரை மாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இத்தகைய விபத்துகள் நடைபெறாமல் இருக்க பட்டாசு தயாரிக்கும் ஆலைகளிலும், பட்டாசு கடை விற்பனை நிலையங்களிலும் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மிகுந்த கண்காணிப்போடு எடுக்க வேண்டும். அதில் ஏதாவது பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தால் அவர்களது உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலமே இத்தகைய விபத்துகளை தவிர்க்க முடியும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்து இருக்கிறார். இதை 5 லட்ச ரூபாயாக உயர்த்தித் தருமாறு தமிழக முதலமைச்சரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய நிதி உதவிகள் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்டாலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்படுகிற பாதிப்பை முழுமையாக ஈடு செய்ய முடியாது.

இத்தகைய தமிழக அரசின் உதவிகள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை காக்கும். சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு.. உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு.. சிவகாசியில் நடப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details