தமிழ்நாடு

tamil nadu

"பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் போராடும் மன உறுதி அளிக்கும்" - மு.க.ஸ்டாலின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 12:23 PM IST

MK Stalin about Bilkis Bano case: பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பை வரவேற்ற மு.க.ஸ்டாலின்
பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பை வரவேற்ற மு.க.ஸ்டாலின்

சென்னை: கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானுவை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து, அவரது குடும்பத்தினர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் குஜராத் மாநில உயர் நீதிமன்றம் முன்விடுதலை செய்தது. இதனிடையே, நேற்று (ஜன.08) குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, 2008ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை அளித்திருந்தது. அதன் பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் நன்னடத்தை காரணமாக முன்விடுதலை அளித்தது. அதனை கண்டித்து, பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு குறித்து விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனி அமர்வு ஒன்றினை அமைத்திருந்தார். இந்நிலையில், நேற்று (ஜன.8) பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் நீதிமன்றத்தின் உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. குஜராத் மாநில பா.ஜ.க அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் லாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.

தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.க ஆட்சியாளர்கள், எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்டகால சிறைவாசிகளை நன்னடத்தையின் அடிப்படையிலும், வயது மூப்பு கருதியும் சட்டபூர்வமாக, முன்விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.

நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்; ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன் என்று சகோதரி பில்கிஸ் பானு அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன.

நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள்" என பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க:போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details