தமிழ்நாடு

tamil nadu

டெங்கு பாதிப்பு 5,000 என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 8:31 PM IST

Tamil Nadu Dengue Fever: இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் 5000 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இந்த பாதிப்பு எண்ணிக்கை 6000 கூட தாண்ட வாய்ப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில், மரணமடைந்தவரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும், உதவித்தொகை அறிவித்து வழங்கியுள்ளனர்.

3 நாட்களுக்கு மேல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 3 நபர்களுக்கு தலா 4,300 ரூபாயும், ஒரு வாரம் சிகிச்சை பெற்ற 8 நபர்களுக்கு தலா 12,700 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4,00,000/- காசோலைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "டெங்கு பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 5000 முதல் 10,000 வரை ஏற்படும். உயிரிழப்புகள் 9 வரை பதிவாகும். 2012ஆம் ஆண்டு 13,000க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவினால் பாதிக்கப்பட்டு, 66 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்தது. அதுதான் டெங்கு பாதிப்பு அதிகபட்ச உயிரிழப்பாகும். 2017 ஆம் ஆண்டு 23,000க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு ஏற்பட்டு 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த இரண்டு ஆண்டுகள் தான் டெங்கு வரலாற்றிலேயே அதிகமான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் 5000 என்ற எண்ணிக்கையில் உள்ளது. மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 400க்குள் உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 4 என்ற அளவில் பதிவாகி இருக்கிறது. டிசம்பர் மாதம் முடிவதற்குள், இந்த பாதிப்பு 6000 கூட தாண்ட வாய்ப்பில்லை என்று கருதுகிறோம்.

திருச்செங்கோடு பகுதியில் ஆட்சியர் உமாவுக்கு அங்கு மருத்துவமனையில் மூன்றாவது குழந்தை விற்கப்படுகிறது என்று தகவல் வந்துள்ளது. ஆண் குழந்தை என்றால் 5 ஆயிரம் ரூபாய்க்கும், பெண் குழந்தை என்றால் 3 ஆயிரம் என்ற அளவில் தரகர்கள் மூலம் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய ரகசிய விசாரணையில் லோகாம்பாள் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டுள்ளதும், அனுராதா என்ற பெண் மகப்பேறு மருத்துவர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும் இவர்கள் இரண்டு பேரை தீவிரமாக விசாரணை செய்ததில் சிறுநீரகம் விற்பனையும் நடந்துள்ளதாக தெரிய வருகிறது. எனவே அந்த விவகாரத்திலும் தீவிர விசாரணை செய்வதற்கு காவல்துறை உயர் அலுவலர்களையும், மருத்துவத்துறை அலுவலர்களுடன் இணைந்து ஒரு குழு அமைத்து தீவிரமாக விசாரணை செய்ய கூறியுள்ளோம்.

இந்த விசாரணைகளுக்குப் பிறகு இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்று முழுமையாக கண்டறிந்து அவர்கள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நேற்று இரவு மருத்துவர் அனுராதாவும், லோகாம்பாள் என்பவரும் கைது செய்யப்பட்டனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரவாயலில் குட்கா கடத்தலில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய கும்பல்..! மீண்டும் கடத்தலில் ஈடுபட்ட போது சிக்கினர்!

ABOUT THE AUTHOR

...view details