தமிழ்நாடு

tamil nadu

அரசியல் தொடர்புடையவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடையாது: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

By

Published : Aug 8, 2022, 6:42 PM IST

அரசியல் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Etv Bharat டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது
Etv Bharat டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

சென்னை:டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும்; அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக் கூடாது, அரசியலில் பங்குப்பெற்று அரசியல் கட்சியுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாக பரிந்துரைக்கப்படக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டம் உள்ளதால், 2021-22ஆம் கல்வியாண்டு முதல் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் 386 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும்.
ஆசிரியர்களுக்கு விருதிற்கு விண்ணப்பம் செய்தவற்கான தகுதிகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு 171; உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு 171, மெட்ரிக் பள்ளிகள் (மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர்) 38, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத்துறை பள்ளிகள் , மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் தலா 2 பேர் என 386 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட வேண்டும். அதனை மாநில அளவில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தப்பட்சம் 5 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும். மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப்பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, நிதி உதவிபெறும் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், சுயநிதி, மெட்ரிக் பள்ளிகள் ஆகிய அனைத்து வகை பள்ளிகளில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் தகுதியுடையவர்.

வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அலுவலகங்களில் நிர்வாகப் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. கல்வியாண்டில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வுபெற்ற ஆசிரியர்களை பரிந்துரைக்கக்கூடாது. பரிந்துரைசெய்யப்படும் ஆசிரியர்கள் எந்தவிதமான குற்றச்சாட்டிற்கும்,ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்டு இருக்கக் கூடாது.

பொது வாழ்வில் தூய்மை, பொது சேவையில் நாட்டம், இடைநிற்றலைக்குறைத்தல், மாணவர் சேர்க்கை, தேர்வில் தேர்ச்சி விழுக்காட்டினை உயர்த்துதல், கல்வித் தரத்தில் பின் தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராக இருத்தல் வேண்டும். அரசியலில் பங்கு பெற்று அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாகப் பரிந்துரைக்கப்படக்கூடாது.

கல்வியினை வணிக ரீதியாக கருதி செயல்படும் ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இந்த விருதிற்குத் தகுதியற்றவர்களாக கருதப்பட வேண்டும். மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற எந்த ஆசிரியரையும் பரிந்துரை செய்தல் கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆக.17 ஆம் தேதி துணை வேந்தர்கள் மாநாடு: அமைச்சர் பொன்முடி

ABOUT THE AUTHOR

...view details