தமிழ்நாடு

tamil nadu

அரசு ஊழியர்களுக்கு செக் - ஊழல், போக்சோ வழக்கில் சிக்கினால் பிழைப்பூதியம் 'கட்'

By

Published : Oct 4, 2021, 12:25 AM IST

ஊழல் மற்றும் போக்சோ வழக்குகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்குவதை நிறுத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு செக்
அரசு ஊழியர்களுக்கு செக்

சென்னை:பேரூராட்சிகளில் ஊழலில் சிக்கி, அவர்களில் எத்தனை பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எத்தனை பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று பேரூராட்சிகள் ஆணையரிடமும், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆசிரியர்கள், ஊழியர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடனும் ஆர்.பெரியசாமி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு சரியான பதில்கள் அளிக்கப்படாததால், அவர் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீடு மனுவை தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் விசாரித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த வழக்கில், மாநில தகவல் ஆணையம் தீர்ப்பு வழங்கி, தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைகளையும் வழங்கி உள்ளது.

பேரூராட்சிகளில் 102 பேர் நீக்கம்

பேரூராட்சிகள் ஆணையத்தின் பொது தகவல் அலுவலர் அளித்த தகவலில் 102 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . அதில் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பேரூராட்சிகளில் 42 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதர குற்றங்களுக்காக 60 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .

1

பாலியல் குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியர்கள்

பாலியல் குற்றங்களுக்காக 232 பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பல்வேறு பாலியல் வழக்குகள் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன.

போக்சோ வழக்கு மற்றும் ஊழல் வழக்குகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்படும் நபர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. லஞ்ச வழக்குகளிலும், போக்சோ வழக்குகளிலும் சிக்கும் அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படும்போது, முதல் 90 நாட்களுக்கு 50 விழுக்காடு ஊதியம், பிழைப்பூதியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. அந்த தொகை 90 இல் இருந்து 180 நாட்கள் வரை 75 விழுக்காடும், 180 நாட்களுக்கு பிறகு முழு ஊதியமும் வழங்கப்படுகிறது.

2

தவறு செய்திருந்தாலும் சுகமான வாழ்க்கை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் ஆறு ஆண்டுகள் பிழைப்பூதியம் என்ற பெயரில் முழு ஊதியத்தை வாங்கியுள்ளார். அதன் பிறகு நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அரசு ஊழியர்கள் தவறு செய்திருந்தாலும், சுகமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

போக்சோ மற்றும் லஞ்ச வழக்குகளில் நீதிமன்ற விசாரணையிலும், துறை ரீதியான விசாரணையிலும் காலதாமதம் ஏற்படுகிறது. அதனால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் என்ற பெயரில் முழு ஊதியம் வழங்குவதால், அரசுக்கு பெரும் நிதி சுமை ஏற்படுத்துகிறது.

சட்ட திருத்தம் வேண்டும்

அரசு ஊழியர் என்ற பதவியை தவறாக பயன்படுத்தி, பணிக்காலத்தில் ஊழல் செய்கின்றனர். பின்னர் பணியிடை காலத்திலும் பணி செய்யாமல் ஊதியம் வாங்குவது, சமுதாயத்தில் அரசு ஊழியர்கள் மீதான மதிப்பை கெடுக்கிறது.

எனவே, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் போக்சோ வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்கும் நடைமுறையை நிறுத்தும் வகையில், தமிழ்நாடு ஊதியம் மற்றும் பிழைப்பூதிய சட்டம் மற்றும் பணி தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் லாவகமாய் இரு சக்கர வாகனம் திருட்டு: அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details