தமிழ்நாடு

tamil nadu

'சூர்யா 42' அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.. ரசிகர்கள் குஷி!

By

Published : Apr 11, 2023, 7:21 PM IST

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடத்தி வரும் பெயரிடப்படாத 'சூர்யா 42' படத்தின் தலைப்பு வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா 42 படத்தின் தலைப்பு அறிவிப்பு எப்போது?..அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!..
சூர்யா 42 படத்தின் தலைப்பு அறிவிப்பு எப்போது?..அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!..

சென்னை:நடிகர் சூர்யா 'நேருக்கு நேர்' படத்தின்‌ மூலம் திரையுலகில், நடிகராக அறிமுகமானார். சரவணனாக இருந்த அவரை இயக்குநர் வசந்த் சூர்யாவாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்தாலும் இவருக்கு நடிப்பே வரவில்லை என்று பலராலும் கிண்டல் செய்யப்பட்டது உண்டு. இந்நிலையில், இயக்குநர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடித்து தனக்குள்ளும் நல்ல நடிகன் இருப்பதை உலகிற்கு உணர்த்தினார்.

அதன் பிறகு, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகரானார். ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் ஆஸ்கார் மேடை வரை சென்றது.இந்நிலையில், தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் சரித்திர படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

மிகப் பிரமாண்டமான முதலீட்டில் இப்படம் உருவாகி வருகிறது. சூர்யா நடித்த படங்களிலேயே இரண்டு மடங்கு அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் இதுதான். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படம் தற்காலிகமாக 'சூர்யா 42' என்று அழைக்கப்படுகிறது. இந்த படத்தில் திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும், 3டி தொழில்நுட்பத்தில் வரலாற்றுப் படமாக இப்படம் உருவாகி வருகிறது. அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என கிட்டத்தட்ட 10 மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது.
ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. தற்போது, படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகும் இப்படம், அனைத்து தரப்பினரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வருகிறது.

மேலும், இப்படத்தில் சூர்யா பல்வேறு விதமான தோற்றத்தில் நடிக்கிறார். இதன் மோஷன் வீடியோவில் அரந்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என பெயர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்துக்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இதன் இந்தி வெளியீட்டு உரிமை 100 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், இப்படத்தின் தலைப்பு என்ன என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். கருடா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் வேறு சில தமிழ் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வருகிற‌ 16-ஆம் தேதி காலை 9.05 மணிக்கு, படத்தின் தலைப்பு வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் வெளியீட்டு தேதியும் அதில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:அயோத்தி திரைப்படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details