தமிழ்நாடு

tamil nadu

அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி.. பணம் பார்க்கவா போட்டித் தேர்வு? - அரசை விளாசிய டெட் ஆசிரியர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 3:29 PM IST

TET Teachers Protest: ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திமுக தங்களை ஏமாற்றி விட்டதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அமைச்சருடன் டெட் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி! போராட்டம் தொடரும் என அறிவிப்பு..
அமைச்சருடன் டெட் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி! போராட்டம் தொடரும் என அறிவிப்பு..

சென்னை:டெட் முடித்த ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமனத்தேர்வை புறக்கணித்து 10,000 க்கும் மேற்பட்ட கடிதங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பினர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்குரிய போட்டித் தேர்வினை நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் என 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து நீதிமன்றத்தில் பலர் வழக்குகளும் தொடர்ந்தனர்.

மேலும், 2018 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம் செய்வதற்கு அரசாணை 149 இன் படி மீண்டும் ஒரு போட்டி தேர்வினை எழுத வேண்டுமென அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர்கள் பணி நியமனம் நடைபெறவில்லை.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் பள்ளிக்கல்வித்துறையில் பணி நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு நடத்துவதற்குரிய அரசாணை 149 ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கான உச்சபட்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 53 எனவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 58 எனவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான போட்டி தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நவம்பர் 1 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகளாக பணியின்றி வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். ஆசிரியர் தகுதித்தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு இதுவரை 40 ஆயிரம் பணிநியமனங்கள் மேற்கொள்ளபட்டுள்ளது.

அதே வேளையில் நாங்கள் தேர்வெழுதி வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்கு பிறகு 2018 ம் ஆண்டு கடந்த கால அரசு, அரசாணை 149 ஐ பிறப்பித்தது. ஏற்கனவே டெட் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் பெற மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என ஒரு அர்த்தமற்ற அரசாணையை கொண்டுவந்தது.

அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை 149 யை இருள் சூழ்ந்த அரசாணை என்று வன்மையாக கண்டித்து, மேலும் திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த அரசாணை நீக்கப்படும் என்றும், 2013 டெட் ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் திமுக தேர்தல் வாக்குறுதியிலும் இடம்பெற செய்தார்.

திமுக ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் எங்களுக்கு மட்டும் இன்னும் விடியல் எட்டப்படவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக திமுக ஆட்சி காலத்தில் 21 போராட்டங்களை முன்னெடுத்தோம். அதிலும் குறிப்பாக கடந்த மாத இறுதியில் நாங்கள் சென்னை டிபிஐ-ல் எடுத்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தின் போது அரசாணை 149 நீக்கப்படும் என அரசு தரப்பில் சொல்லபட்டது.

இச்சூழலில் திடீரென அந்த வார்த்தையையும் தேர்தல் வாக்குறுதி 177 யும் காற்றில் பறக்கவிட்டு 4 தினங்களுக்கு முன்பு ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்கள் வேதனையை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

எனவே உடனடியாக 2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமனத்தேர்வை புறக்கணிக்கின்றோம். இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட கடிதங்களை பள்ளிக்கல்விதுறை அமைச்சருக்கு அனுப்பி உள்ளோம். பாதிக்கபட்ட நாங்கள் இந்த தேர்வை தொடர்ந்து புறக்கணித்த போதும் யாருக்காக இந்த தேர்வு? பணம் பார்க்கவா? அல்லது திமுக வின் வெற்றிக்கு பாடுபட்ட எங்களை பதம் பார்க்கவா? பயிற்சி மையங்களுக்கு கரம் சேர்க்கவா? என்ன நோக்கத்திற்காக இந்த தேர்வு?

இருள் சூழ்ந்த அரசாணை என்று தமிழக முதல்வரால் அறிவிக்கபட்ட இந்த அரசாணையை பள்ளிகல்வி துறை அதிகாரிகளும் அமைச்சரும் செயல்படுத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டி செயல்படுவதன் உள் நோக்கம் இன்றுவரை விளங்காத ஒன்றாகவே உள்ளது.

உடனடியாக தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி எங்களுக்கு அவர் அளித்த வாக்கையும், வாக்குறுதியையும் காப்பாற்றி திமுக ஆட்சியை கலங்கமின்றி நடத்திட வேண்டும். மேலும் தாமதப்படுத்தினால் வரும் நாட்களில் இன்னும் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதையும் தெரிவிக்கின்றோம்” என கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தனது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இன்று நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக ஈரோட்டில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க போவதாக ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் அறிவித்துள்ளனர். திமுக சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் 149 அரசாணையை ரத்து செய்வதாக தெரிவித்துவிட்டு இப்போது தங்களை ஏமாற்றி விட்டதாக ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் குற்றம் சாட்டினர்.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி குண்டர் சட்டத்தில் கைது? உயர்நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details