தமிழ்நாடு

tamil nadu

Operation Missing Children: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

By

Published : Jun 8, 2023, 8:00 AM IST

கடந்த 10 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: உலகம் முழுவதும் குழந்தைகள் ஏதோ ஒரு காரணத்திற்காக காணமல் போகின்றனர். அது கடத்தலாக இருக்கலாம், பெற்றோருக்கு பயந்து உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை என்றாலே, அவர்கள் காணாமல் போன குழந்தைகளின் பட்டியலில்தான் சேர்க்கப்படுவார்கள்.

தேசிய அளவில் ஒரு நாளுக்கு சுமார் 200 வரையிலான குழந்தைகள் காணாமல் போவதாக வழக்குகள் பதியப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் காணாமல் போகும் 3இல் ஒரு குழந்தை பற்றி தகவலே கிடைக்காமல் போகின்றது. ஆகையால், தற்போது காணாமல் போன குழந்தைகளை கண்டறிவதற்காக 'ஆப்ரேஷன் மிஸ்ஸிங் சில்ட்ரன்' என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட அனைத்து காவல் ஆணையர் மற்றும் எஸ்பிக்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், "கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன கண்டுபிடிக்கப்படாத வழக்குகளின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.

அதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களின் உதவியுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஆகியோர் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அனைத்து காவல் ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து காவல் நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளர்கள் இந்த சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நல குழுக்களும் இந்த சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மாபெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும்.

அதைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட குழந்தைகளின் விவரங்கள் சுமார் 24 மணி நேரத்தில் தெரிவிக்கப்பட வேண்டும். அந்த ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கை 12 ஜூன் 2023 அன்று அனுப்பப்படும். மேலும், இந்த சிறப்பு நடவடிக்கையை சிறப்பாக கையாளும் காவல் துறை ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு தகுந்த வெகுமதி அளிக்கப்படும்" எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் அவரச அழைப்பு எண்:18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஏதேனும் பிரச்னை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள், பெற்றோருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் உள்ளிட்ட என்ன காரணமாக இருந்தாலும் 24 மணி நேரமும் செயல்படும் 1098 என்ற ஹெல்ப் லைன் எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம்.

பொதுமக்கள் செய்ய வேண்டியவை: சந்தேகப்படும்படியாக யாரேனும் குழந்தையை வலுக்கட்டாயமாக கொண்டு செல்லும்போது, ஏதேனும் ஒரு குழந்தை சாலையில் அல்லது பொது இடங்களில் தனியாக இருந்தாலோ அல்லது பெற்றோர்களே தங்களது குழந்தைகளை தவறவிட்டு விட்டாலோ, உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். தற்சமயம் அருகில் காவல் நிலையம் இல்லாதபட்சத்தில், குழந்தைகள் ஹெல்ப்லைன் மூலம் புகார் அளிக்கலாம்.

அவ்வாறு பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள். இல்லையெனில், www.trackthemissingchild.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம்.

இதையும் படிங்க: Madhya Pradesh borewell accident: 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கித்தவிக்கும் 2 வயது குழந்தை!

ABOUT THE AUTHOR

...view details