தமிழ்நாடு

tamil nadu

Online Rummy: "மனசாட்சியை உறங்கச் செய்து ஆட்சியா?" - சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின்!

By

Published : Mar 23, 2023, 2:02 PM IST

ஆன்லைன் ரம்மி தடை மசோதா இன்று மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேறியுள்ள நிலையில், மசோதாவை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனியொரு உயிர் ஆன்லைன் ரம்மியால் பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்குடன் செயல்படுவதாக தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இது குறித்த ஆளுநரின் கடிதத்தை சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். கடிதத்தின் நகல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய மசோதாவை தாக்கல் செய்யும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார்.

மு.க.ஸ்டாலினின் உரையின் சுருக்க வடிவம் வருமாறு: "மிகவும் கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படியான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து, இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்ட துயரமான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையோடுதான் எனது உரையை நான் தொடங்குகிறேன்.

சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 17 லட்ச ரூபாய் வரை இழந்து, அந்தக் கடனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்துக்கு முன்னால் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டு, இறந்து போயிருக்கிறார். "தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள், என்னைப்போல் பலரும் தங்களது குடும்பத்தை அனாதையாக விட்டுவிட்டுச் செல்லக் கூடாது. இத்தகைய நிலை யாருக்கும் வரக்கூடாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "எனது தற்கொலையே கடைசி தற்கொலையாக இருக்கட்டும்" என்று எழுதி வைத்துவிட்டு, சென்னையைச் சேர்ந்த வினோத்குமார் தற்கொலை செய்துள்ளார்.

நாளுக்கு நாள் இந்த மரணங்கள் நம்முடைய கண்ணுக்கு முன்னால் நடக்கின்றன. இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சட்டத்தைக் கையில் வைத்திருக்கக்கூடிய இந்த அரசுக்கு இருக்கிறது. இதனை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என கூறினார்.

மேலும், "இந்தச் சட்டம் அறிவால் மட்டுமல்ல, இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். அரசியல் காரணங்களில், கொள்கைகளில் நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம், அப்படி எழுவது இயற்கையானதுதான். ஆனால், மனித உயிர்களைப் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் இதயமுள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.

'எனது மரணம் கடைசியாக இருக்கட்டும்' என்ற சோகக் குரலும், 'என் குடும்பத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு குடும்பத்துக்கு ஏற்படக் கூடாது' என்ற அழுகுரலும் இனியொரு முறை இந்த மாநிலத்தில் எழக்கூடாது. எழுமானால், சட்டத்தின் பொருளும் மாநிலத்தின் அதிகாரமும் நீர்த்துப் போனதன் அடையாளமாக ஆகிவிடும். சட்டம் ஒழுங்கைப் பேணுவதும், மக்களைப் பாதுகாப்பதும், குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதும், குற்றவாளிகளிடம் இருந்தும் மக்களைக் காப்பதும் மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையாகும்.

மாநிலத்தின் ஆளுகை எல்லைக்குள் உள்ள மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும், காக்கவும் மாநில அரசுக்கு உரிமை உண்டு, மீண்டும் சொல்கிறேன் – மாநில அரசுக்கு அந்த உரிமை உண்டு. மாண்புமிகு ஒன்றிய தகவல் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. அனுராக் தாகூர் அவர்கள், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு, 21-3-2023 அன்று பதில் அளிக்கையில், பந்தயம் மற்றும் சூதாட்டமானது, அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப் பட்டியலின் 34-வது பிரிவில் இடம் பெற்றுள்ளதால் இது தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறதென்று மிகத் தெளிவாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

மனச்சாட்சியை உறங்கச் செய்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்பதை பிரகடனமாகவே இந்த மாமன்றத்தில் தெரிவிக்க நான் விரும்புகிறேன். எந்தச் சட்டத்தின் நோக்கமும் மக்கள் நலன் மட்டும்தான். மக்களைக் காப்பது ஒன்றே சட்டத்தினுடைய கடமை ஆகும். சட்டவியல் என்பதே, சமூக அறிவியல் தான் என்பதை உலகம் முழுவதும் இருக்கும் சட்டமேதைகள் ஒப்புக் கொள்வார்கள். பயன்பாட்டில் நீதி என்பது, அற நீதி (Natural or Moral Justice) என்றும் சட்ட நீதி (Legal Justice) என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

எனவே நீதிநெறி, ஒழுக்க விதிகளை காப்பாற்றவே சட்டநீதியை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவு, 2022 இம்மாமன்ற உறுப்பினர்கள் முன் வைக்கப்படுகிறது. இனியொரு உயிர் பறிக்கப்படாமல்; இனியொரு குடும்பம் நடுத்தெருவில் நிற்காமல்; இனியொரு நாள்கூட இந்த ஆன்லைன் அநியாயம் தொடராமல் இருக்க அனைத்து உறுப்பினர்களும் இந்தச் சட்ட முன்வடிவை ஆதரிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார். இதனையடுத்து மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

இதையும் படிங்க:இப்போ என்ன செய்வீங்க... ஆன்லைன் சூதாட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றிய தமிழ்நாடு சட்டப்பேரவை!

ABOUT THE AUTHOR

...view details