தமிழ்நாடு

tamil nadu

சென்னை வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு... ஆளுநர், முதலமைச்சர் உற்சாக வரவேற்பு!

By

Published : Aug 5, 2023, 8:42 PM IST

சென்னை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை : கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அரசு முறை பயணமாக இன்று (ஆகஸ்ட். 5) தமிழ்நாடு வந்தார். டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் காலை 11 மணி அளவில் புறப்பட்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மைசூர் விமான நிலையத்திற்கு மதியம் 3 மணியளவில் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மூலம் நீலகரி மாவட்டத்திற்கு விரைந்தார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் சரணாலயத்துக்கு பிற்பகல் 3.30 மணிக்கு திரெளபதி முர்மு வந்தடைந்தார். முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிட்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, அதன் பிறகு யானை பாகன்களுடன் கலந்துரையாடடினார். தொடர்ந்து ஆஸ்கர் வென்ற "தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன்- பெள்ளியை அகியோரை சந்தித்து பாராட்டினார்.

அதன் பிறகு மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டரில் மைசூரூக்கு புறப்பட்டு சென்றார். தொடர்ந்து மைசூரில் இருந்து விமானம் மூலம் இரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இன்று (ஆகஸ்ட். 8) இரவு ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுக்க திட்டமிட்டு உள்ள குடியரத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (ஆகஸ்ட். 6) காலை சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அதன்பிறகு ஆளுநர் மாளிகை செல்லும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, அங்கு முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிறகு நாளை (ஆகஸ்ட். 6) மதியம் 3.30 மணியளவில் பழங்குடியின பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், இரவு 7 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடக்கும் பாரதியார் படத் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கத்திற்கு பாரதியார் பெயரை சூட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :"யானைகளை பாதுகாப்பது நமது தேசிய பொறுப்பாகும்" - நீலகிரியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details